"அமெரிக்கா - சீனா இடையே பயங்கர போர்".. 2025-ல் நிச்சயம் நடக்கும்.. அமெரிக்க விமானப்படை தளபதி கணிப்பு
தைவான், இந்தியா நாடுகளை சீனா தொடர்ந்து சீண்டி வரும் நிலையில், அமெரிக்கா - சீனா இடையே போர் நடக்கும் என்ற கணிப்பு உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தயுள்ளது
வாஷிங்டன்: அமெரிக்கா - சீனா இடையே பயங்கரமான போர் ஒன்று 2025-ம் ஆண்டு நிச்சயம் நடைபெறும் என்று அமெரிக்க விமானப்படை தளபதி கூறியிருப்பது பெரும் சலசலப்பையும், பீதியைும் ஏற்படுத்தியுள்ளது.
தைவான் மீது படையெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்க விமானப்படை தளபதியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தைவான் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவை சீனா தொடர்ந்து சீண்டி வருவதும் அமெரிக்காவை போரில் இறங்க வைக்கும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
போர் மிரட்டல் விடுத்த சீனா.. களத்தில் சந்திக்க தயார்? பயிற்சியில் இந்தியா! எல்லையில் கடும் பதற்றம்!
போரை விரும்பும் சீனா
தனி நாடாக விளங்கும் தைவானை நெடுங்காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. எப்படியாவது தைவானை சீனாவுடன் இணைக்க அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தைவானுக்கு பக்கபலமாக இருப்பதால் அந்நாட்டை நெருங்க சீனா தயக்கம் காட்டி வந்தது. ஆனால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாக போர் தொடுத்தது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை சீனாவுக்கு துணிச்சலை கொடுத்துள்ளது. இதனால், தைவான் மீது போர் தொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீன ராணுவம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவிடமும் சீண்டல்
தைவான் விவகாரம் ஒருபுறம் இருக்க, இந்தியாவையும் அவ்வப்போது சீனா சீண்டி வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான லடாக், அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் பல முறை முயற்சி செய்தது. ஆனால், இந்திய ராணுவத்தினரின் தீரத்திற்கு முன்னால் சீனப்படையினரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. லடாக்கிலும் சரி.. அருணாச்சலப் பிரதேசத்திலும் சரி., தொடர்ந்து இந்தியாவிடம் குட்டு வாங்கி ஓடுவதே சீனாவுக்கு வாடிக்கையாகி விட்டது.
அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை
இந்நிலையில், தைவான் மீது போர் தொடுக்க சீனா முயற்சித்தால் அதற்கு முன்னதாக எங்கள் ராணுவத்தை சீனா எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்கா சமீபத்தில் பகிரங்கமாக எச்சரித்திருந்தது. அதேபோல, இந்தியாவை தாக்கினால் நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் எனவும் அமெரிக்கா உறுதிபட கூறியது. அமெரிக்காவின் இந்த நேரடி எச்சரிக்கையால் சீனா தற்போது அடக்கி வாசித்து வருகிறது. இருந்தபோதிலும், இந்திய எல்லைகளில் தொடர்ந்து படைகளையும், ராணுவத் தளவாடங்களையும் சீனா குவித்து வருகிறது.
அமெரிக்கா - சீனா பயங்கர போர்..
இந்த சூழலில், அமெரிக்க விமானப்படை தளபதிகளில் ஒருவரான ஜெனரல் மைக் மினிஹான், தனது தலைமை தளபதிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித விவரங்கள் இப்போதுதான் வெளியாகியுள்ளன. அதில் அவர், "நான் நினைப்பது தவறாக கூட இருக்கலாம். ஆனால், என் உள்ளுணர்வு ஒன்றை சொல்கிறது. அது, அமெரிக்கா - சீனா இடையே 2025-ம் ஆண்டு ஒரு மிகப்பெரிய பயங்கரமான போர் நடக்கும் என்பதுதான்" எனக் கூறியுள்ளார். இந்தக் கடிதம் நேற்று சர்வதேச ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் கேட்ட போது, "அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது அமெரிக்க ராணுவத்தின் கருத்து அல்ல" என பதிலளிக்கப்பட்டது.