அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு சுவீட் நியூஸ்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா தாக்கல்!!
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021' என்கிற சட்ட மசோதாவை அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார்.
இந்த குடியேற்ற மசோதா முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் 1 கோடியே 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும்.
இந்த 'அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021' மசோதா சட்டமானால் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.
ஜோ பைடன் அதிரடி
அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் பதவியேற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஜோ பைடன் பதவியேற்றது முதல் பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் மோசமான கொள்கைகளை மாற்றியமைத்து வருகிறார்.
அமெரிக்க குடியுரிமை சட்டம்
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021' என்கிற சட்ட மசோதாவை நேற்று முன்தினம் அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார். 2021 ஆம் ஆண்டின் அமெரிக்க குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அதிபர் ஜோ பைடன் கையொப்பமீட்டு சட்டமாக்கப்பட உள்ளது.
1 கோடியே 10 லட்சம் பேருக்கு குடியுரிமை
இந்த குடியேற்ற மசோதா முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் 1 கோடியே 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும். அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் கிரீன் கார்டு வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைவது மற்றும் எச்1 பி விசாதாரர்களுக்கு பணி அங்கீகாரம் வழங்குவது ஆகியவையும் இந்த மசோதா வழி வகுக்கும்.
இந்தியர்களுக்கு குட் நியூஸ்
இந்த 'அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021' மசோதா சட்டமானால் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன் அடைவார்கள். குறிப்பாக ஐ.டி. எனப்படும் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த சட்டம் மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
நிரந்தர குடியுரிமை கிடைக்கும்
செனட்டர் பாப் மெனண்டெஸ் மற்றும் பிரதிநிதிகள் சபை லிண்டா சான்செஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியேற்ற சீர்திருத்தத்திற்காக அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021 இயற்றப்பட்டுள்ளது. இந்த முக்கியமான சட்டத்தின் கீழ், க்ரீன் கார்டுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவர்களுக்கு நிரந்திர குடியுரிமை கிடைக்கும். இந்தச் சட்டத்தின் இந்தியர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள் என்று கூறினார்.