துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட கசோகி... சவுதி இளவரசரே உத்தரவிட்டார்.. அமெரிக்கா திட்டவட்டம்
வாஷிங்டன்: சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் அடிப்படையிலேயே செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்றது முதலே சர்வதேச அரங்கில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ தொடங்கிவிட்டன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை டிரம்ப் அணுகுமுறையும் பைடன் அணுகுமுறையும் முற்றிலுமாக வேறு வேறாக உள்ளது.
நுரையீரல் முதல் கருப்பை புற்றுநோய் வரை.. ஆரம்பத்தில் தடுப்பது எப்படி.. அறிகுறிகள் என்ன.. Dr ஒய் தீபா
டிரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய புள்ளியாகச் சவுதி அரேபியாவை பார்த்தது. ஆனால், பைடன் நிர்வாகம் சவுதியை தொடர்ந்து விமர்சன கண்ணோட்டத்திலேயே அணுகிவருகிறது. இந்நிலையில், சவுதி தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்ட ஜமால் கஷோகி குறித்து அமெரிக்கா ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளன.
கொடூர கொலை
தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக இருந்தவர் ஜமால் கஷோகி. அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஜமால் கஷோகி , தொடர்ந்து சவுதி அரேபியா மீதும் இளவரசர் பின் சல்மான் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பத்திரிக்கைகளில் எழுதி வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு, இவர் துருக்கி நாட்டில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். உலகையே உலுக்கிய இந்த கொலைக்கும் இளவரசர் பின் சல்மானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இளவரசருக்கு தொடர்பு
இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா தற்போது உளவு துறை ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அதில் துருக்கியில் செய்தியாளர் ஜமால் கஷோகியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்லும் ஆப்ரேசனுக்கு முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமது பின் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் இந்த படுகொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் எதிர்ப்பாளர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் சவுதி இளவரசர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் இதில் பொருந்திப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமால் கஷோகி
சவுதி அரேபியாவில் மிகவும் புகழ்பெற்ற பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால் கஷோகி. 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியனர். இவர் முதலில் சவுதி அரசு குடும்பத்துடன் நெருக்கமாகவே இருந்தவர். பின்னர், அவர் திடீரென்று சவுதி அரசு குடும்பம் குறித்தும் அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும் விமர்சிக்கத் தொடங்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்திற்கு ஜமால் கஷோகி சென்றார்.
என்ன நடந்தது
அங்கு இருந்து சவுதி உளவு பிரிவினர், ஜமால் கஷோகியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். சவுதியிலிருந்து அனுப்பப்பட்ட 15 பேர் கொண்ட குழு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, அமிலத்தை கொண்டு அழித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. டிரம்ப் அதிபராக இருந்தபோதே இந்த உளவு துறையின் அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், சவுதியை டிரம்ப் முக்கிய கூட்டணி நாடாக கருதியதால், இந்த ரகசிய ஆவணத்தை அவர் பொது வெளியில் வெளியிடவில்லை.
சவுதி மறுப்பு
ஆனால், பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி படுகொலைக்கும் சவுதி இளவரசருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றே சவுதி அரசு தொடர்ந்து கூறிவருகிறது. துருக்கியிலிருந்த சில அதிகாரிகளே கஷோகியை கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்து வருகிறது. இந்த கொலை தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், ஐந்து பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையைச் சவுதி நீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..