பாகிஸ்தானை விட்டு விளாசிய அமெரிக்கா.. எப் 16 விமானத்தால் ஏற்பட்ட மோதல்
வாஷிங்டன்: எப் 16 போர் விமானத்தை விதிமுறைகளுக்கு மாறாக பயன்படுத்தியதாக பாகிஸ்தானை அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படைகள் புகுந்து சென்று, பாலகோட், பகுதியில் தீவிரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தன. இதன்பிறகு, பாகிஸ்தான் இந்திய எல்லையில் சீண்டல்களை தொடங்கியது.
பாகிஸ்தான் போர் விமானமான எப் 16, ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவிடம் இந்த வகை விமானங்களை பாகிஸ்தான் கொள்முதல் செய்தபோது, இந்தியா மீது தாக்குதல் நடத்த இதை பயன்படுத்த கூடாது என்று அமெரிக்கா நிபந்தனை விதித்திருந்தது.
கண்டிப்பு
இந்த நிலையில், பாகிஸ்தான் விமானப்படைத் தலைவருக்கு அந்த நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரி ஆண்ட்ரியா தாம்சன் ஒரு "எழுத்துப்பூர்வமான கண்டிப்பு கடிதம்" அனுப்பியதாக யு.எஸ். நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இந்திய வான்படை தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தான் எப் 16, விமானத்தை பயன்படுத்தியதற்காக இந்த கண்டிப்பா என்பது பற்றி செய்தியில் குறிப்பிடவில்லை.
மறுப்பு
இந்த மோதலின்போது பாகிஸ்தான் எஃப் -16 களைப் பயன்படுத்தவில்லை என அந்த நாடு மறுத்து வருகிறது. இந்த மோதலுக்கு பிறகுதான் இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு விரைவில் விடுவிக்கப்பட்டார்.
விமான பாகங்கள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு-காஷ்மீரை பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள ராஜோரிக்கு கிழக்கே இந்திய ஏவுகணை தாக்கி எப் 16 விமானம் நொறுங்கி விழுந்தது. இதற்கு ஆதாரமாக, விமானத்தின் சில பகுதிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் பின்னர் காட்டினர். பாகிஸ்தான் எஃப் -16 விமானங்களை பயன்படுத்தியது என்பதற்கு இதுவே சான்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எண்ணிக்கை குறைவு
பின்னர், பாரின் பாலிசி என்ற இதழ் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானின் எஃப் -16 விமானம் ஒன்று குறைவதாக அமெரிக்கா நடத்திய ஆய்வில் தெரியவந்ததாக செய்தி வெளியிட்டது.