வலுக்கும் சந்தேகம்..அமெரிக்காவில் இருந்த அதிமுக்கிய கொரோனா டேட்டாக்களை..நீக்கிய சீன ஆய்வாளர்கள்..ஏன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சேமிக்கப்பட்டிருந்த வூஹான் நகரின் ஆரம்பக்கட்ட கொரோனா வைரஸ் தொடர்பான டேட்டாக்கள் சீனா ஆய்வாளர்களால் நீக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் தொடங்கி ஓர் ஆண்டு கடந்துவிட்ட நிலையிலும்கூட வைரஸின் தோற்றம் குறித்து நமக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
உலகைப் புரட்டிப் போட்டுள்ள கொரோனாவின் தோற்றம் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அப்போது தான் மீண்டும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வூஹான் மையம் - கொரோனா தோற்றம்.. அதிமுக்கிய ஆவணத்தை பைடன் அரசுக்கு கொடுத்த சீன அமைச்சர்..அடுத்து என்ன
வூஹான் மையம்
முதலில் கொரோனா வௌவால்களில் இருந்த மனிதர்களுக்குப் பரவியிருக்கும் எனச் சொல்லப்பட்டது. உலக சுகாதார அமைப்பும்கூட இதே கருத்தையே வலியுறுத்தியது. இருப்பினும், சீனாவில் உள்ள வூஹான் மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அமெரிக்காவின் புலனாய்வுத் துறை கருதுவதாகத் தகவல் வெளியானது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா டேட்டா
பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகளும் வூஹான் மையத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வூஹான் வைராலஜி மையத்தின் மீது சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது வூஹான் நகரில் ஆரம்பக் காலங்களில் சேகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரிகளைச் சீன ஆய்வாளர்கள் அமெரிக்காவிலுள்ள Sequence Read Archive நிறுவனத்தில் சேமித்து வைத்துள்ளனர்.
சீன ஆய்வாளர்கள்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் இந்த டேட்டாக்களை அனுப்பியுள்ளனர். இருப்பினும் மூன்றே மாதங்களில் அந்த டேட்டாக்களை சீன ஆய்வாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். கொரோனா வைரசின் Sequence டேட்டாவை அப்டேட் செய்து வேறு இடத்தில் சேமித்து வைத்துவிட்டதால் தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க கொரோனா டேட்டாக்களை திரும்பப் பெறுவதாக அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தவறு இல்லை, ஆனால்
இருப்பினும், இந்த ஒரு செயலை மட்டும் வைத்துக் கொண்டு நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. ஆய்வில் கிடைக்கும் அனைத்து டேட்டாக்களின் உரிமையும் ஆய்வாளர்களுக்கே உள்ளதால் இதைத் தவறு என்று கூற முடியாது. இது குறித்துத் தேவைப்பட்டால் விசாரணை மட்டும் நடத்தலாம். இருந்தாலும்கூட கொரோனா பரவல் - வூஹான் மைய கோட்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்தத் தகவல் அமைந்துள்ளது.
உலக நாடுகள்
கொரோனா தோற்றம் குறித்த உண்மையான தகவல்களைச் சீனா வெளியிட மறுப்பதாகப் பல நாடுகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளைத் திசை திருப்பவே சீனா முயல்வதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களிடம்கூட முழு தரவுகளைச் சீனா சமர்ப்பிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளன. பல்வேறு நாடுகளும் இதில் ஆர்வம் காட்டி வருவதால், கொரோனா தோற்றம் பற்றிக் கண்டிப்பாக அதிர வைக்கும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.