73ஆவது திருமண நாள்... ஒன்றாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டாடிய அமெரிக்க தம்பதி
வாஷிங்ன்: அமெரிக்காவின் வடக்கு கென்டக்கி மாகாணத்திலுள்ள தம்பதி, தங்கள் 73ஆவது திருமண நாளை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டாடியுள்ளனர்.
உலகில் கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. முதலில் சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நாட்டிலுள்ள வயதானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. முதலில் சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நாட்டிலுள்ள வயதானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
திருமண நாளில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட தம்பதி
இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கென்டக்கி மாகாணத்திலுள்ள தம்பதி, தங்கள் 73ஆவது திருமண நாளை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டாடியுள்ளனர். வடக்கு கென்டக்கியின் சின்சினாட்டி பகுதியைச் சேர்ந்த 93 வயதாகும் நோயல் ஜீன் ரெக்கார்டும், 91 வயதாகும் வர்ஜீனியா ரெக்கார்டும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை திருமண நாளன்று ஒன்றாக எடுத்துக்கொண்டுள்ளனர். மூன்று வாரங்களுக்குப் பின் இரண்டாவது டேஸை எடுத்துக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்
இது குறித்து ஜீன் ரெக்கார்ட் கூறுகையில், "கூடிய விரைவில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறோம். கடந்த மார்ச் மாதம் முதல் நாங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறோம். அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். அப்போதுதான் எங்களால் வெளியே சென்று என்ஜாய் செய்ய முடியும்" என்றார்.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட தலைவர்கள்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முதலில் மக்கள் தயக்கம் காட்டினர். அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் மக்கள் முன்னிலையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். இது மக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தைக் குறைத்தது. அதன் பின்னரே, அமெரிக்காவில் மக்கள் அதிகளவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தொடங்கினர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 1.71 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.48 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் 2,768 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 4.11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.