"ஒரே ரூமில்தான் தங்குவோம்".. 90 வயசு தாத்தாவின் கோரிக்கை.. வியந்த டாக்டர்கள்.. உருக்கும் கண்ணீர் கதை
அமெரிக்காவில் வைரஸ் தாக்கிய தம்பதியினர் ஒரே சமயத்தில் இறந்துவிட்டனர்
வாஷிங்டன்: "எங்க 2 பேருக்கும் ஒரே ரூம்தான் வேணும்.. படுக்கையும் பக்கத்தில் பக்கத்தில்தான் வேணும்" என்று 90 வயசு தாத்தா, தன் மனைவியை காட்டி டாக்டர்களிடம் ஏன் சொன்னார் என்று அப்போது புரியவில்லை.. அந்த அந்நியோன்யத்தை காலம் மெய்ப்பித்துவிட்டு போயுள்ளது!
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் டிக்.. இவருக்கு 90 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஷெர்லி.. அவருக்கு 87 வயதாகிறது. கடந்த டிசம்பர் 22ம் தேதிதான் இவர்கள் இருவரும் 70வது திருமண நாளை கொண்டாடினார்.
ஊரே வந்து வாழ்த்தியது.. தம்பதி முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.. யார் கண்ணு பட்டுதோ தெரியவில்லை. கடந்த ஜனவரி 8ம் தேதி 2 பேருக்குமே கொரோனா உறுதியாகிவிட்டது..
தொற்று
2 பேருமே அதிர்ந்து நிலைகுலைந்து போய்விட்டனர். உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர்.. சிகிச்சையும் ஆரம்பமானது. ஆனால், 2 பேருமே அதிக வயசானவர்கள் என்பதால், சிகிச்சை பலன் தராமலேயே இருந்தது.. அதுமட்டுமல்ல, உயிர் பிழைக்க வாய்ப்பும் இல்லை என்றும் தெரிந்துவிட்டது. அதனால், இந்த விஷயத்தை டாக்டர்கள் அந்த தாத்தாவிடம் சொன்னார்கள்.
பிள்ளைகள்
அப்போதுதான், தங்கள் இருவரையும் ஒரே ரூமில் தங்க வைத்து சிகிச்சை தரும்படியும், மருந்து, சிகிச்சை உட்பட வசதிகளுடன் படுக்கைகளையும் பக்கத்து பக்கத்திலேயே இருக்கும்படி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.. இவர்கள் சொன்னதையே அந்த தாத்தாவின் பிள்ளைகளும் சொன்னார்கள். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகமும், ஒரு பெரிய ரூம் தயார் செய்து, அங்கேயே இருவரையும் அருகருகே படுக்கையை போட்டனர்..
சிகிச்சை கருவிகள்
அந்த படுக்கையில் சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அப்போது தாத்தா, இன்னொரு கோரிக்கையை வைத்தார்.. நாங்கள் 2 பேரும் இறந்துவிட்டால், ஜான் டென்வரின் வென் தி ரிவர் மீட்ஸ் தி சீ (When the River Meets the Sea) என்ற பாட்டை ஒலிக்க செய்ய வேண்டும் என்றார். அதற்கும் டாக்டர்கள் சரி என்றனர்.
ஷெர்லி
இப்போது தாத்தாவின் அருகில் மனைவி ஷெர்லியை கொண்டு வந்து படுக்க வைத்தனர்.. நர்ஸ் ஒருவர் அந்த பாட்டை ஆன் செய்தார்.. தம்பதி 2 பேரும் தங்கள் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டனர்.. அப்போது ஷெர்லி "பரவாயில்ல, நாம் இப்போ போகலாம்" என்று கணவனிடம் சொன்னார்.. உடனே தாத்தா, "நான் உனக்காக காத்திருப்பேன்" என்று சொல்லிய உடனேயே உயிர் பிரிந்துவிட்டது.. அவர் இறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே தாத்தாவும் இறந்துவிட்டார்.
தாம்பத்யம்
70 வருட தாம்பத்தியத்தை கண்டு, அந்த ஆஸ்பத்திரியே மிரண்டு போய் கண்ணீர் விட்டது.. டாக்டர்கள், பெற்றோரின் பிள்ளைகள் கதறி கதறி அழுதனர்.. "எங்க அப்பா, அம்மா சொர்க்கத்திற்கு ஒன்றாகவே சென்றுள்ளனர்.. எத்தனை பேருக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும்" என்றனர். இந்த ஆதர்ச தம்பதிக்கு 5 குழந்தைகள்.. 13 பேர குழந்தைகள்.. 28 கொள்ளுப் பேரன் - பேத்திகள் உள்ளனர்... அத்தனை பேரும் இவர்களை நினைவுபடுத்தி நெகிழ்ந்து வருகின்றனர்!