எச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை
வாஷிங்டன்: : எச்1பி விசா வைத்திருப்பவர்ளின் மனைவி மற்றும் கணவர், அமெரிக்காவில் பணிபுரிவதற்கு தடை விதிக்க அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக இந்த விசா, அதிக திறன் வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணிகளை பெரும்பாலும் இந்தியர்கள் அதிக அளவு பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் எச்-1பி விசா வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 இஏடி விசா அளித்து அமெரிக்காவில் பணியாற்றுவதை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் கடந்த 2015ல் ஒபாமா அதிபராக இருந்த போது கொண்டு வரப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற போது,‘அமெரிக்க வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையை அறிமுகம் செய்தார். அத்துடன் எச்-4 விசாவில் பணியாற்றும் திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தார். இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா' என்ற அமைப்பு, அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2016ல் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
டிரம்ப் நிர்வாகம் விளக்கம்
இதனிடையே ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா' அமைப்பு கொலம்பியா மாவட்ட மேல்முறையீடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில், எச்-4 விசாவில் பணியாற்றும் திட்டத்தை ரத்து செய்வதற்கான பணிகளை அரசு மும்முரமாக செய்து வருவதாக தெரிவித்து இருந்தது.
சட்டத்தை நீக்க முடியாது
இந்நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ‘‘எச்-1பி விசா வைத்திருப்போரின் கணவனோ அல்லது மனைவியோ அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சட்டத்தை நீக்க முடியாது.. இந்த வழக்கை ஆரம்ப கட்டத்தில் மீண்டும் முழுமையாக மதிப்பீடு செய்ய கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கிறோம், கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரித்து தீர்வு காண வேண்டும். எச்-1பி விசா வைத்திருப்போர் நிரந்தர குடியுரிமை பெற நீண்டகால தாமதம் ஆகிறது.
இந்தியர்கள் நிம்மதி
இதனால் வாழ்க்கை துணைகள் பணியாற்றவும் தடை விதித்தால், அது தனிப்பட்ட மற்றும் பொருளாதார சிக்கலுக்கு வழிவகுக்கும். அதன் விளைவாக அமெரிக்க நிறுவனங்கள் திறமை வாய்ந்த தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்வதில் இடையூறுகள் ஏற்படும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது. கொலம்பியா நீதிமன்ற உத்தரவு, எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணைகளுக்கு ஆறுதல் அளித்திருக்கும். ஏனெனில் எச்-4 விசா மூலம் . ஒரு லட்சம் இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்கள்.