டிரம்பின் அலட்சியத்தால்... 4 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு... என்ன செய்யப்போகிறார் பைடன்
வாஷிங்டன்: டிரம்பின் அலட்சியப் போக்கு காரணமாக அமெரிக்காவில் தற்போது கொரோனா உயிரிழப்பு நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், பைடன் அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் இறுதி ஆண்டில் நுழைந்தபோது, அந்நாட்டில் முதல் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், வைரஸ் பரவல் குறித்து மக்கள் கவலைக் கொள்ளத் தேவையில்லை என்றும் அரசு நிலைமையைக் கட்டுக்குள் வைத்துள்ளது என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.
இன்று, டிரம்ப் தனது அதிபர் பதவியில் இறுதி நாளில் உள்ளார். இப்போது அமெரிக்காவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கோவிட் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டிரம்ப் அரசு காரணம்
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்ததற்கு டிரம்ப் அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்றும் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். டிரம்ப் அரசு ஆரம்பக் காலத்தில் நிலைமையைச் சரியாகக் கையாண்டு இருந்தால் ஆயிரக்கணக்கான மரணங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தேசிய பேரிடர் மையத்தின் இயக்குநரும் பொதுச் சுகாதார நிபுணருமான டாக்டர் இர்வின் ரெட்லெனர் கூறினார். அரசின் திறமையின்மை மற்றும் நேர்மையின்மை ஆகியவற்றின் விலையை இப்போது கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிக உயிரிழப்பு
கொரோனா காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் கிளீவ்லேண்ட், தம்பா, புளோரிடா ஆகிய மாகாணங்களின் மக்கள் தொகைக்குச் சமம். அதேபோல வெள்ளம், சர்க்கரை நோய் மற்ற தொற்றுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், விரைவில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த அமெரிக்கர்களைவிட அதிக பேரை கொரோனாவால் அமெரிக்க இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொறுப்பற்ற டிரம்ப் அரசு
உலகில் கொரோனா உறுதி செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். நிலைமை இவ்வளவு மோசமாகச் செல்ல டிரம்பின் சொதப்பலான முடிவுகளே காரணம் என்பது வல்லுநர்களின் குற்றச்சாட்டு. தொடக்கம் முதலே வல்லுநர்களின் கருத்துகளைப் புறந்தள்ளி டிரம்ப் தனது அதிமேதாவித்தனத்தை காட்டிவந்தார். நிலைமை மோசமானதும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மாகாண அரசின் பொறுப்பு என்றும் மத்திய அரசு வெறும் பேக்அப் என்றும் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தார். மேலும், ஆராய்ச்சியாளர்களைவிடத் தான் அறிவாளி என்றும் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என்றும் அவர் தொடர்ந்து உண்மைக்கு மாறான கருத்துகளையே கூறினார்.
டிரம்பின் அலட்சியம்
கொரோனா பரவல் அமெரிக்காவில் உச்சமடைந்த காலகட்டத்தில் மாகாண அரசுகள் ஊரடங்கை நீக்க வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் தந்தார். கொரோனாவால் ஏற்பட்டுள்ளது வெறும் பொருளாதார பாதிப்புதான், அது சுகாதார பாதிப்பு இல்லை என்பதைத் தொடர்ந்து நிறுவ முயன்றார். ஆனால், இது போன்ற நடவடிக்கைகளை உயிரிழப்புகளைக் குறைக்க உதவவில்லை.
பைடன் அரசு
இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், ஜோ பைடன் இன்று அமெரிக்காவின் 46ஆவது அதிபராகப் பதவியேற்க உள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்தி, அமெரிக்கா பொருளாதாரத்தை மீண்டும் தட்டியெழுப்புவதே அவரது முதன்மை நோக்கமாக உள்ளது. பதவியேற்ற கையோடு பைடன், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். மேலும், முதல் 100 நாளில் 10 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளார். என்ன நடவடிக்கை எடுத்தாலும் வரும் நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் குறைய வேண்டும் என்பதே அமெரிக்கர்களின் எண்ணமாக உள்ளது.