ஆரக்கிளுடன் பைட்டான்ஸ் ஒப்பந்தம் உறுதி.. அமெரிக்க தடையிலிருந்து டிக்டாக் தப்புமா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கும் முடிவை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டதால் அமெரிக்காவில் தடையிலிருந்து டிக்டாக் செயலி தப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளை தடை செய்ய அமெரிக்கா முன் வந்தது. இதற்கான உத்தரவு கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்டது.
டிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை.. சீனா கடும் கண்டனம்
செப் 15
இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. இதனிடையே டிக்டாக்கின் பைட்டான்ஸ் நிறுவனம் செப் 15-க்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவும் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.
நிர்வாக உத்தரவு
இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டபடி தடை உத்தரவுக்கான 45 நாட்கள் கெடு நேற்றோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று முதல் அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
தள்ளி வைத்தல்
இதையடுத்து எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் முக்கிய திருப்பமாக டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒரு வாரத்திற்கு அதாவது வரும் 27-ஆம் தேதி வரை தள்ளி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வால்மார்ட்
ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தடை தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட்டான்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.