தோற்றாலும் பதவி விலக மாட்டாராம் ட்ரம்ப்.. களேபரம் உறுதி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை டொனால்டு டிரம்ப் வெற்றி பெறாவிட்டால், அதிகாரத்தை விட்டுத் தராமல் பெரும் முரண்டு பிடிப்பார் என்பது அவரது பேச்சின் மூலம் தெரிய வருகிறது. அதிபரின் இந்த பேச்சு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது ஆளும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். எதிர் கட்சியான, ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜோ பைடன் மீது தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஜோ பைடன் போதை மருந்து உட்கொண்டு விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக ட்ரம்ப் கூறும் அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சனம் சென்று கொண்டிருக்கிறது.
வேளாண் மசோதா...பஞ்சாபில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்... 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து!!
ஆட்சி மாற்றம்
இந்த நிலையில்தான் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள ஒரு கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்ப் இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தியபோது ஒரு நிருபர், "தேர்தலுக்கு பிறகு அதிகார மாற்றத்தை நீங்கள் பிரச்சினை இல்லாமல் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கலாமா" என்று கேள்வி எழுப்பினார்.
பார்த்துவிட்டு முடிவு
இதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், என்ன சொன்னார் பாருங்கள்: அமெரிக்க அதிபர் தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நான் நீண்டகாலமாகவே மெயில் வாக்குப்பதிவு (mail-in voting) மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லி வருகிறேன். இந்த வாக்குப் பதிவு முறை மிகப்பெரிய பேரழிவை தரப்போகிறது.
வாக்குச் சீட்டு ஓகே
அதே நேரம், வழக்கமான வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றால், அதிகாரத்தை விட்டுத் தருவதில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால், நான் அதிகாரத்தை விட்டுத் தரத் தேவையில்லை. ஏனெனில் மக்கள் எங்களுக்குத்தான் ஆதரவாக ஓட்டுப் போடுவார்கள். எனது ஆட்சி தொடரும். இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அதிகார மாற்றத்திற்கு சம்மதிக்காத ட்ரம்ப்
அமெரிக்காவில், கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு mail-in voting முறையில், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி முறைகேட்டில் ஈடுபடும் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். முன்னதாக பாக்ஸ் நியூஸ் சேனல், டொனால்ட் ட்ரம்ப்பிடம் கடந்த ஜூலை மாதம் எடுத்த ஒரு நேர்காணலின்போது அதிகாரமாற்றத்திற்கு நீங்கள் சம்மதிப்பார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், நான் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆம்.. என்ன நடக்கிறது என்பதை பார்க்கவேண்டும். எளிதாக நான் ஆமாம் என்று சொல்லிவிட முடியாது என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவில் அதிர்வலை
தேர்தலில் தான் தோற்றால் அது தேர்தல் முறைகேடாக இருக்குமே தவிர, அமெரிக்க மக்கள் தனக்கு எதிராக ஓட்டுப்போட மாட்டார்கள் என்று ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபர் இவ்வாறு அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுப்பது போன்று பேசி வருவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு அமெரிக்காவில் என்னென்ன களேபரங்கள் ஏற்பட போகும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.