முடியபோகும் ஜார்ஜியா மறு வாக்கு எண்ணிக்கை.. இன்னும் 4 மணி நேரத்தில் ரிசல்ட் வரப்போகிறது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் நான்கு மணி நேரத்தில் முடிவடையும் என தெரிகிறது. ஜார்ஜியாவில் டிரம்பிற்கும் பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் மூலம் அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. வாக்குகளின் எண்ணிக்கை இன்னும் 4 முதல் 5 மணி நேரத்தில் முடிவடையும் என தெரிகிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தங்கள் நாட்டை யார் வழிநடத்துவார்கள் என்பதை அறிய அமெரிக்கர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த சூழலில் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் வரப்போகிறது.
சமீபத்திய சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஜோ பிடன் மற்றும் டிரம்ப் இடையே ஜார்ஜியாவில் சிறிய அளவில் வாக்கு வித்தியாசம் உள்ளது. 4,169 வாக்குகள் எண்ணப்பட வேண்டியவை என்றும், சுமார் 8,000 தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன என்றும், அவை நாள் இறுதிக்குள் வந்தால் மட்டுமே கணக்கிடப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். இதன் மூலம் இன்னும் சில மணி நேரத்தில் ஜார்ஜியா இழுபறி முடிவுக்கு வருகிறது.
இந்த 'ஆறு' எப்போதும் வரலாம்.. முடிவுக்கு வரும் இழுபறி.. வெற்றியின் விளிம்பில் ஜோ பிடன்
ஜார்ஜியாவில், சமீபத்திய சுற்று எண்ணிக்கையிலான முடிவுகளுக்குப் பிறகு, பிடன் 1096 வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப்பை முந்தியுள்ளார். ஏற்கனவே விஸ்கான்சின் மற்றும் மிச்சிகனில் டிரம்பை காலி செய்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போதைய கணக்குப்படி, பிடனுக்கு 264 தேர்தல் வாக்குகளும், டிரம்பிற்கு 214 வாக்குகளும் உள்ளன. தற்போது இன்னும் கணக்கிடப்படாத ஆயிரக்கணக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட உள்ளன. எனவே அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் பிடனுக்கும் இடையிலான போட்டியை சில மணி நேரத்தில் ஜார்ஜியா முடித்து வைக்க போகிறது.