மக்கள் போடும் ஓட்டு இருக்கட்டும்.. அதை விட முக்கியமானதை டிரம்ப், பிடன் ஜெயிச்சாக வேண்டும்!
நாளை அதிபர் வாக்கு பதிவு நடைபெற உள்ளது
வாஷிங்டன்: அப்பாடா.. ஒரு வழியாக அமெரிக்க அதிபர் தேர்தலும் வந்து விட்டது. இந்திய நேரப்படி நாளை மாலை முதல் வாக்குப் பதிவு தொடங்குகிறது. ஆனால் அதற்குப் பிறகுதான் நிறைய வேலை இருக்காம்.
Recommended Video
அமெரிக்காவில் ஜனநாயகம் ரொம்பவே வித்தியாசமானது... எல்லாமே பக்காவாக பிளான் செய்துதான் நடப்பார்கள்.. உலக நாடுகளின் ஜனநாயகத்தை விட இங்கு சற்று கட்டுப்பாடுகள் அதிகம். அதாவது கட்டுப்பாட்டுடன் கூடிய ஜனநாயகத்தை அந்த நாடு கடைப்பிடிக்கிறது.
கரெக்டாக அதிபர் தேர்தலை உரியநேரத்தில் நடத்தி விடுவார்கள். .அதன்படி தற்போதும் தேர்தல் திட்டமிடப்பட்டு நாளை வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. .அந்த ஊரில் எப்படி என்றால் வாக்குப் பதிவு நாளன்றுதான் ஓட்டுப்போட வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல்: முந்தும் ட்ரம்ப்... ஜோ பிடனுக்கு நோ சான்ஸ் - எண் கணித நிபுணர் கணிப்பு
வாக்குபதிவு
பல வாரங்களுக்கு முன்பாகவே ஓட்டுக்களைப் பதிவு செய்ய ஆரம்பிக்கலாம்.. நேரில் வந்து ஓட்டுப் போடலாம். தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம். நமது சவுகரியம்தான்.. அதேசமயம், அதிகாரப்பூர்வமான வாக்குப் பதிவு நாளைக்குப் பிறகு யாரும் ஓட்டுப் போட முடியாது. அந்த அதிகாரப்பூர்வமான வாக்குப் பதிவு நாள்தான் நாளையாகும்.
வாக்குகள்
இந்திய நேரப்படி நாளை மாலை அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே பல லட்சம் பேர் நேரிலும் தபால் மூலமாகவும் வாக்களித்து விட்டனர். எனவே இந்த முறை வாக்குகளை எண்ணும் பணிமுடிவடைய தாமதமாகும் என்று தெரிகிறது எனவே வெற்றியாளர் யார் என்பதை அறிவதிலும் தாமதமாகும் இந்த முறை.
பிரதிநிதிகள்
நாளை வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி விடும். லீடிங் டிரெண்டுகள் முதலில் வர தொடங்கும்.. அதன் பிறகு டிசம்பர் 14ம் தேதி எலக்டோரல் காலேஜ் பிரதிநிதிகள் அதிபர் தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்வார்கள். இந்த எலக்டோரல் காலேஜ் வாக்குகள்தான் தேர்தலில் முக்கியமானது.
வெற்றியாளர் யார்?
அமெரிக்க சட்டப்படி, ஒவ்வொரு மாகாணத்திற்கும் உள்ள எலக்டோரல் வாக்குகளின் மதிப்பு மாறுபடும். அதாவது ஒவ்வொரு மாகாணத்திலும் பதிவான மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த எலக்டோரல் வாக்குகளின் மதிப்பு அமையும்... அதிக அளவிலான எலக்டோரல் வாக்குகளைப் பெறுபவர் வெற்றியாளராக கருதப்படுவார். அதாவது குறைந்தபட்சம் 270 எலக்டோரல் வாக்குகளை பெற வேண்டும். மொத்த எலக்டோரல் வாக்குகளின் எண்ணிக்கை 538 ஆகும்.
கிளிண்டன்
கடந்த தேர்தலில் ஹில்லாரி கிளிண்டனுக்கு மக்கள் வாக்குகள் அதிகம் கிடைத்தன. ஆனால் டிரம்ப்புக்கு எலக்டோரல் வாக்குகள் அதிகம் கிடைத்த காரணத்தால் அவர் அதிபராகி விட்டார் என்பது நினைவிருக்கலாம். எனவே இந்த முறை எலக்டோரல் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன... அந்த வகையில் அதிபராகும் ராசி டிரம்ப்புக்கு மீண்டும் கிடைக்குமா அல்லது பிடன் தட்டி செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எலக்டோரல் வாக்குகள்
அடுத்து ஜனவரி 6ம்தேதி காங்கிரஸ் சபை கூடுகிறது. அதாவது அந்த ஊரின் நாடாளுமன்றம்... மதியம் 1 மணிக்குக் கூடும்.. அங்கு எலக்டோரல் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகுதான் வெற்றியாளர் முறைப்படி அறிவிக்கப்படுவார். ஜனவரி 20ம் தேதி வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் பதவியேற்பு தினம். அதிபராகவும், துணை அதிபராகவும் வெற்றி பெற்றவர்கள் வாஷிங்டனில் உள்ள கேபிடல் தளத்தில் பதவி ஏற்றுக் கொள்வார்கள்... இது நேரலையாக ஒளிபரப்பப்படும்.