இன்று முதல் அமெரிக்காவில் ஷட்டவுன்.. 8 லட்சம் ஊழியர்கள் பணிக்கு வரமாட்டார்கள்.. பணிகள் ஸ்தம்பிக்கும்
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டின் மூன்றாவது ஷட்டவுன், இன்று முதல், தொடங்குகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கி வரும் சூழ்நிலையில், நடைபெறும், இந்த ஷட்டவுன் காரணமாக மக்களுக்கு தொல்லைகள் ஏற்பட்டுள்ளன.
மெக்சிகோவில் இருந்து அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் வருவதை கட்டுப்படுத்துவதற்காக இரு நாட்டு எல்லையில் சுவர் எழுப்பது டொனால்ட் ட்ரம்ப் கனவு திட்டமாகும்.
இதற்காக, 500 கோடி டாலர் நிதி கேட்டு கோரிக்கை முன்வைத்தார் ட்ரம்ப். ஆனால் எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே நிதி செலவின மசோதா நிறைவேற்றப்படாமல் செனட் அவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
செனட் அவை
அதேநேரம், ஆளும் குடியரசு கட்சி பிரதிநிதிகள் ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபையில், செலவின மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இரு அவை ஒப்புதலும் தேவைப்படும் நிலையில் இது குறித்து ஒருமித்த கருத்து எட்டுவதற்காக ஜனநாயக கட்சியின் எம்பிக்களுடன், குடியரசு கட்சி எம்பிக்கள் பேச்சுவார்த்தை நடத்தினனர். ஆயினும் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 12 மணி 1 நிமிடத்திற்கு பிறகு ஷட்டவுன் தொடங்க உள்ளது.
8 லட்சம் ஊழியர்கள்
ஷட்டவுன் ஆரம்பித்தால் அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் அனைத்து துறைகளும் முடங்கும். 8 லட்சம் ஊழியர்கள் பணிக்கு வர மாட்டார்கள். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்கிவிட்ட நிலையில், அமெரிக்காவில் ஷட்டவுன் தொடங்கியுள்ளது என்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
|
டொனால்ட் ட்ரம்ப்
காவல்துறை மற்றும் ராணுவம் தவிர அனைத்து அரசு துறைகளும் தொடங்கும் என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால் இந்த ஷட்டவுனுக்கு, தாங்கள் காரணம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், கூறுகையில், ஷட்டவுன் ஏற்படுவதற்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் தான் காரணம். எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்று தெரிந்த பிறகும் கூட செனட் சபையில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. எல்லையை திறந்து விட்டு குற்றச்செயல்கள் நடைபெறவேண்டும் என்பது மக்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.
எத்தனை நாட்கள் நடக்கும்
இன்று தொடங்கும் ஷட்டவுன் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 நாட்கள் நடைபெற்ற ஷட்டவுன் காரணமாக 24 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் இது மூன்றாவது முறையாக நடைபெறும் ஷட்டவுன் என்பது குறிப்பிடத்தக்கது.