வூஹான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா.. சந்தேகிக்க காரணங்கள் உள்ளன.. மைக் பாம்பியோ பகீர் தகவல்
வாஷிங்டன்: வூஹான் நகரிலுள்ள வைரலாஜி ஆய்வகத்திலிருந்து முதலில் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என்று சந்தேகிக்கத் தேவையான காரணங்கள் உள்ளதாக அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
கொரோனோ பாதிப்பு 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. தற்போது உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவ தொடங்கியபோது, இந்த வைரஸ் வூஹான் நகரிலுள்ள வைராலஜி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் சீனா இதைத் திட்டமிட்டுப் பரப்புவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து இந்த வைரஸை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வந்தார்.
உலக சுகாதார அமைப்பு
இந்நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த வல்லுநர் குழு கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் சீனாவின் வூஹான் நகருக்குச் சென்றுள்ளது. தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் விரைவில், கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றச்சாட்டு
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு கொரோனா தோற்றம் குறித்து சீன அரசிடம் கூடுதல் தகவல்களைப் பெற அழுத்தம் தர வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கொரோனா பரவ தொடங்கியபோது, சீனாவைக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க தலைவர்களில் மைக் பாம்யோ முக்கியமானவர்.
இதனால் தான் சந்தேகம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "2019ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வூஹான் வைரலாஜி மையத்திலிருந்து ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசை ஒத்திருந்த மற்ற தொற்றுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதனாலேயே இந்த வைரஸை சீனா திட்டமிட்டு உருவாக்கியிருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.
பாயும் பாம்பியோ
ஆனால், இதற்கு நேர் மாறாக கொரோனா தொற்றால் வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் யாரும் பாதிக்கவில்லை என்று சீனா கூறுகிறது. இப்போதும் கூட சீனா வைரஸ் பரவல் குறித்த முக்கிய தகவல்களைச் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை" என்றார். அமெரிக்காவில் விரைவில் பைடன் அரசு பதவியேற்கவுள்ளது. இருப்பினும் மைக் பாம்பியோ தொடர்ந்து சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கொரோனா பாதிப்பு
கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 2.48 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.42 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல அமெரிக்காவில் இதுவரை 4.01 லட்சம் பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.