சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்தி டிரம்பை பதவி நீக்குங்கள்.. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய தீர்மானம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பை சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்தி தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
Recommended Video
பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்கு ஆதரவாக 223 எம்பிகளும் எதிராக 205 எம்பிகளும் வாக்களித்தனர். இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒருவரும் டிரம்பை நீக்க வேண்டும் என்று வாக்களித்தார்.
டிரம்பை பதவியில் இருந்து நீக்க சொந்த கட்சி எம்பிக்களே ஆதரவு
சட்டப்பிரிவு 25 கூறுவது என்ன?
50 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய அதிபர் ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது, இந்தச் சட்டப்பிரிவு 25 கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி அமெரிக்க அதிபரால் செயல்படாத நிலை வரும்போது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளிக்கும்பட்சத்தில் அதிபரை நீக்கும் அதிகாரம் துணை அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பின், அதிபரின் அதிகாரங்கள் அனைத்தும் துணை அதிபருக்கு வழங்கப்படும்.
துணை அதிபர் மைக் பென்ஸ் மறுப்பு
இது குறித்து துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபை சபாநாயகர் நான்சி பெலோசிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி, சட்டப்பிரிவு 25 என்பது யாரையும் தண்டிக்க உருவாக்கப்பட்டது இல்லை. சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தற்போதைய சூழ்நிலையில், டிரம்பை பதவி நீக்கம் செய்வது என்பது நாட்டின் நலனிற்குச் சரியாக இருக்காது" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
நான்சி பெலோசி பேச்சு
இருப்பினும், டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் மேல் சபை சபாநாயகர் நான்சி பெலோசி உறுதியாக உள்ளார். இது குறித்து மேல் சபையில் பேசிய நான்சி பெலோசி, "ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அதிபர் மற்றும் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் அரசியலமைப்பை மீறும் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடந்த இந்த தாக்குதல் வரலாற்றில் கறுப்பு நாளாக இருக்கும். இதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்துள்ளனர். எனவே, தேச நலனிற்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார் என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன" என்றார்.
டிரம்ப் கூறுவது என்ன
தன்னை பதவி நீக்கம் செய்ய நடைபெறும் முயற்சி குறித்துப் பேசிய டிரம்ப், அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில் கருத்துச் சுதந்தரம் தற்போது நசுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், "என்னை அதிபர் பதவியிலிருந்து நீக்குவது வரலாற்றில் நடைபெறும் மிகப் பெரிய வேட்டையின் தொடர்ச்சி, இது நாட்டில் மக்களிடையே கோபத்தையும் பிளவையும் ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில், இது அமெரிக்காவிற்கு மிகவும் ஆபத்தானது" என்றார்.
டிரம்ப் மீது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம்
கடந்த ஜனவரி 6ஆம் தேதி டிரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக இதில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற அவர் முயன்றுள்ளார் என்றும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே, தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக டிரம்ப் எவ்வித ஆதாரமும் இன்றி குற்றஞ்சாட்டி வந்தார். தேர்தல் முடிவுகளை மாற்றப் பல வழிகளிலும் முயன்று முடியாமல் போனதால், ஜனவரி 6ஆம் தேதி தன் ஆதரவாளர்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறை ஏற்படுத்த அவர் முயன்றார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை
மைக் பென்ஸ் சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்த மறுத்துள்ள நிலையில், டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் மீது இது தவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பைடனுக்கு எதிராக உக்ரைன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுத்ததாகப் பதவி நீக்கத் தீர்மானம் எடுத்து வரப்பட்டது. இருப்பினும், அப்போது குடியரசு கட்சியினர் ஆதரவு காரணமாக இந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.