டிரம்ப் திடீர் முடிவு.. இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர் அடுத்த 60 நாட்கள் குடியுரிமை பெற தடை
வாஷிங்டன்: அடுத்த 60 நாட்களுக்கு அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற தடைவிதித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். இதன் காரணமாக இந்தியர்கள் உள்பட எந்த வெளிநாட்டவர்களும் அமெரிக்காவில் தற்காலிகமாக குடியுரிமை பெற முடியாது.
Recommended Video
அமெரிக்காவில் இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேஷியர்கள் உள்பட பல்வேறு வெளிநாட்டினர் தான் கணினி துறையில் கோலோச்சுகிறார்கள். குறிப்பாக இந்தியர்கள் ஏராளமானோர் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
வெளிநாட்டினர் யாரையாவது உயர் திறன் உடையவர்கள் என்ற வகையில் தொழில்நுட்ப பணியில் சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள நிறுவனங்கள் விரும்பினால், அளிக்கப்படும் விசா எச்1பி விசா மற்றும் எல்1 விசா. இந்த விசாக்கள் மூலம் அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்று லட்சக்கணக்கில் வேலை செய்கிறார்கள்.
45 ஆயிரம் பேர் பலி
இந்நிலையில் கொரோனாவின் தாக்குதல் அமெரிக்காவில் தீவிரமாக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் கொரோனாவால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழந்து வருகிறார்கள்.
டிரம்ப் மீது அதிருப்தி
இதனால் கொரோனாவால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இதனால் அதிபர் டிரம்ப் மீது அமெரிக்கர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. முன்னரே டிரம்ப் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.
வெளிநாட்டவருக்கு தடை
இந்நிலையில் அதிபர் தேர்தலில் மீண்டும் டிரம்ப் போட்டியிடும் நிலையில் அவர் மீது கடும் அதிருப்தி பரவி வருகிறது. இதனால் அமெரிக்கர்கள் மத்தியில் ஆதரவை பெறுவதற்காக வெளிநாட்டினர் அஸ்திரத்தை டிரம்ப் கையில் எடுத்துள்ளார். இதன்படி அமெரிக்காவில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் யாரும் அடுத்த 60 நாட்களுக்கு குடியுரிமை பெற முடியாத படி டிரம்ப் தடை விதித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், தனது நடவடிக்கை தற்போதைய பணிநிறுத்தத்தின் போது வேலை இழந்த அமெரிக்கர்களுக்கு உதவும். குடியேற்றத்தை இடைநிறுத்துவதன் மூலம், அமெரிக்கா மீண்டும் திறக்கும்போது வேலையில்லாத அமெரிக்கர்களை வேலைகளுக்கு முதலிடத்தில் வைக்க இது உதவும். இந்த இடைநிறுத்தம் 60 நாட்களுக்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் எந்தவொரு நீட்டிப்பு அல்லது மாற்றங்களையும் முடிவு செய்வேன் என்றார்.