அவங்கள அமெரிக்க மண்ணை மிதிக்க விடமாட்டோம்... பத்திரிக்கையாளர் கஷோகி கொலை.. பைடன் அரசு அதிரடி
வாஷிங்டன்: செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ரகசிய ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, சவுதி நாட்டை சேர்ந்த 76 பேருக்கு விசா தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
துருக்கி நாட்டில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் ஜமால் கஷோகி கடந்த 2018ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அமெரிக்க அரசு இது தொடர்பான முக்கிய ஆவணங்களை இன்று வெளியிட்டது.
8 வது முறையாக தாவல்- காங், ஜனதா, ஜனதா தள், திமுக, மதிமுக, அதிமுக, திமுக- இப்ப மநீமவில் பழ. கருப்பையா
அதில் துருக்கியில் ஜமால் கஷோகியை கொல்லும் ஆப்ரேசனுக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முகமது பின் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் இந்த படுகொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கஷோகி சட்டம்
பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். அவரது கொலைக்கும் சவுதி அரசுக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து கடும் கோபத்தில் அமெரிக்கா உள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட கஷோகியை கவுரப்படுத்தும் வகையில் கஷோகி சட்டம் என்ற சட்டத்தையும் அமெரிக்கா தற்போது அமல்படுத்தியுள்ளது.
76 பேருக்கு தடை
அதன்படி சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த 76 பேருக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அவர்களின் விசா விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. கஷோகி படுகொலைக்குக் காரணமானவர் நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் இது தொடர்பான குற்றவாளிகள் யாரும் அமெரிக்க மண்ணில் அனுமதிக்கக் கூடாது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இளவரசருக்கும் தடை
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இந்தத் தடை பொருந்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், "தற்போது தடை செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் அவர் இல்லை. பொதுவாக, ஒரு நாட்டின் உச்சபட்ச பொறுப்பில் இருப்பவர்களுக்கு அமெரிக்கா தடை விதிக்காது" என்று அவர் கூறினார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி நாட்டின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சவுதி மறுப்பு
ஆனால், அமெரிக்க உளவு துறையின் இந்த அறிக்கையைச் சவுதி அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக அமெரிக்கா பொய்யான ஏற்கமுடியாத அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சவுதி அரசு குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கை முடிவுகள் ஏற்றுக்கொள்ள தக்க வகையில் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.