சிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்
Recommended Video
வாஷிங்டன்: இந்தியா தனது இரண்டாவது நிலவுக்கான பயணத்தைத் தொடங்குவதன் மூலம், இதுவரை இல்லாத அளவுக்கு சிக்கலான விண்வெளி சாகசத்தில் அது இறங்குகிறது என்று கூறியுள்ளது, அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான தி வாஷிங்டன் போஸ்ட்.
சந்திராயன்-2 விண்கலம் வரும் திங்கள்கிழமை, விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அமெரிக்க பத்திரிக்கையின் கட்டுரை முழு விவரம் இதோ:
அப்பல்லோ 11 - இன் 50 வது ஆண்டு நிறைவு வருடத்தில் யதேர்ச்சையாக சந்திராயன் -2 விண்ணுக்கு கிளம்புகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திரனின் பெயரிடப்படாத தென் துருவப் பகுதியில் விண்கலம் மெல்ல இறங்ககூடும்.
வச்ச குறி தப்பாது... மழை பெய்தாலும் சந்திராயன் 2 விண்ணில் பாயும்.. சிவன் பேட்டி
நீர், பள்ளங்கள்
ஆதிகால சூரிய மண்டலத்தின் புதைபடிவ பதிவுகளைக் கொண்ட நீர் மற்றும் பள்ளங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்த விண்கலம் இறங்கும் இப்பகுதி முக்கியமானது, என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்திய விண்வெளி அமைப்பின் முதல் தலைவர் பெயரையொட்டி, விக்ரம் என்று லேண்டருக்கு பெயரிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் "ஞானம்" என்று பொருள்படும் 'பிரக்யான்' என்ற ரோவர் ஆகியவையும், இந்த விண்வெளி பயணத்தில் இடம் பெற்று உள்ளன.
நிலவில் தண்ணீர்
இந்த மிஷன் வெற்றிகரமாக நிறைவடைந்தால், சந்திரனைப் பற்றிய புரிதல்களை அதிகரிப்பதோடு, "இந்தியாவிற்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்கும்" என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தெரிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாட்டின் முதல் விண்வெளி ஆய்வு விண்கலம் சந்திராயன் -1 சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அதேநேரம், சந்திராயன் -2 பற்றி, இஸ்ரோவின் தலைவர் சிவன், கூடுதல் தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மோடி முக்கியத்துவம்
இந்தியாவின் விண்வெளித் திட்டம் 1960 களின் முற்பகுதியில் தொடங்கியிருந்தாலும், அது பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் கூடுதல், முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு மற்றும் தேசபக்தி சொல்லாட்சிக்களை மையமாகக் கொண்டவர் மோடி. மே மாதம் மீண்டும் பொதுத் தேர்தல் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச அளவில் நாடு உயர்ந்து வருகிறது என்பதற்கான அடையாளமாக காண்பிக்கவும், அதன் பாதுகாப்பு திறனின் ஒரு அரணாகவும் காண்பிக்க பிரதமர் மோடி இந்திய விண்வெளி திட்டத்தை ஊக்குவித்துள்ளார்.
வரிசையான திட்டங்கள்
2022 க்குள், இந்திய விண்வெளி அமைப்பு, மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. முன்னதாக, இது 2014 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியிருந்தது. "இந்தியா அந்த நாட்டை ஒரு பெரிய விண்வெளி சக்தியாக மாற்றும் முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளது" என்று "இரண்டு விண்வெளி ஆய்வு" நூலின் ஆசிரியர் மார்க் விட்டிங்டன் எழுதியுள்ளார். உலக அரங்கில் ஒரு முக்கிய நாடாக இருக்க, அதற்கு "தீவிரமான விண்வெளித் திட்டம்" தேவை என்பதை இந்தியா உணர்ந்திருந்தது என்கிறார் அவர்.
மோடி ஆர்வம்
மார்ச் மாதம் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடி திடீரென தொலைக்காட்சியில் உரையாற்றினார், குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோளை ஏவுகணையால் இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும், இப்படியான சாகசம் செய்த நான்காவது நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும் அறிவித்தார். அமெரிக்கா, சீனா, ரஷ்யா வரிசையில் இந்தியா இந்த பட்டியலில் இணைந்தது.
நிதி செலவு
இந்தியாவின் விண்வெளி திட்டங்களை விமர்சிப்பவர்கள் முன்வைப்பது ஒரே ஒரு வாதம்தான். ஒரு வளரும் நாடு, தன்னுடைய, விண்வெளி ஆய்வுக்கு மில்லியன் கணக்கில் செலவழிக்க முடியுமா என்பதே அது. நாட்டின் விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் விக்ரம் சாராபாய், இதற்கு பதில் சொல்லியுள்ளார். "தேசிய அளவிலும், சமூகத்திலும் ஒரு அர்த்தமுள்ள பாத்திரத்தை வகிக்க, மனிதனின் மற்றும் சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
செலவு கம்மி
மேலும் சிலரோ, அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் விண்வெளி ஆய்வுகளின் செலவு-செயல்திறன் சிறப்பாக உள்ளது என்று, எடுத்துரைத்துள்ளனர்.
இந்தியாவின் முதல் செவ்வாய் கிரக ஆய்வு செயற்கைக்கோள், மங்கள்யான், அதற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட குறைவான செலவில் விண்ணில் ஏவப்பட்டது. 141 மில்லியன் டாலர் அளவுக்கான பணத்தை, தற்போதைய சந்திர ஆய்வு பணிக்காக இந்தியா செலவிடுகிறது. இந்த செலவு, அமெரிக்காவின், அப்பல்லோ மிஷனின் 25 பில்லியன் டாலர் என்றர செலவைக் காட்டிலும் மிகக் குறைவாகும். செவ்வாய் மற்றும் சந்திரன் மிஷனுக்கு, அதாவது இரண்டும் சேர்த்தே, இந்தியாவின் செலவீனம் 408 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே உள்ளது.
அதிகரித்துள்ள பட்ஜெட்
இந்தியா விண்வெளிக்கான பட்ஜெட் செலவினங்களை இந்த ஆண்டு 11 சதவீதம் அதிகரித்து 1.8 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இருப்பினும் இது நாசா அல்லது சீனா செலவழிக்கும் தொகையை விட மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியா தனது விண்வெளித் திட்டத்தில் கவனம் செலுத்துவது அதன் இளம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு, தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.