கொரோனாவுக்கு எதிராக மாஸ் வெற்றி.. மனிதர்களிடம் வேலை செய்கிறது தடுப்பூசி! அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த, மாடர்னா இன்க், என்ற பயோடெக் நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை, மனிதர்களிடம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்து உள்ளதாக அறிவித்துள்ளது. மனிதர்களிடம் இந்த மாதிரியான தடுப்பூசி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது இது தான் முதல் முறை என்பதால் இந்த ஆய்வு முடிவு உலகளாவிய அளவில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
Recommended Video
உலக அளவில் சுமார் 50 லட்சம் பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த நிலையில்தான், நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உலகம் முழுக்க கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நீக்கப்பட்ட புகைப்படங்கள்.. அகற்றப்பட்ட சிலை.. மாயமான கிம் ஜோங் உன்.. வடகொரியாவில் மீண்டும் பதற்றம்
மார்ச் மாதம்
இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா என்ற பயோடெக் நிறுவனம் ஒன்று ஆகும். சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், குரங்குகளுக்கு பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன. எலிகளுக்கும் பரிசோதனை செய்துள்ளனர். ஆனால், மனிதர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவராமல் இருந்தது. அமெரிக்காவை சேர்ந்த இந்த ஆய்வகம் மனிதர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையை கடந்த மார்ச் மாதம் துவங்கியது.
100 மைக்ரோ கிராம் டோஸ் மருந்து
45 வகையான பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டு அதில் தன்னார்வலர்கள் 8 பேர் தாங்களாக முன்வந்து தடுப்பூசிகளை உடலில் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில்தான், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வைரஸ் பாதிப்பில் சிக்காமல் தப்பித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 மைக்ரோ கிராம் என்ற அளவுக்கு தடுப்பூசி கொடுத்தது. கூடுதலாக 25 மைக்ரோ கிராம் அளவுக்கு ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்தும் செலுத்தப்பட்டது.
எதிர்ப்பு சக்தி கண்டுபிடிப்பு
தற்போது, இவர்களது ரத்தத்தைப் பரிசோதித்து பார்த்தபோது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பிறகு மீண்ட மக்களுடைய ரத்தத்தில் காணப்படும் கூடிய எதிர்ப்பு சக்தி, இவர்களுக்கும் இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இது முதல் கட்டமான பரிசோதனை முடிவு என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. அதாவது, இந்த மருந்துகளால் அதை உடலில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு, பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. இந்த மருந்து அவர்களுக்கு எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே மருந்தின் ஆற்றலை இன்னும் அதிகப்படுத்துவதற்கு நிறுவனம் முயற்சி செய்கிறது.
மருந்து டோஸ் அதிகரிப்பு
இதுகுறித்து மாடர்னா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது கட்ட ஆய்வின்போது, மருந்து அளவை அதிகரிக்க உள்ளோம். அதாவது 250 மைக்ரோ கிராம் அளவுக்கு தடுப்பு மருந்தும், 50 மைக்ரோ கிராம் அளவுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்க உள்ளோம். இது பக்க விளைவு ஏற்படுகிறதா என்பதை அடுத்த கட்டமாக பார்க்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்த நிறுவன பங்குகள் 20 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளன.
பக்க விளைவு கிடையாது
எந்த அளவுக்கான மருந்து, கொரோனா வைரஸ் பாதிப்பை அண்டவிடாமல் செய்யும் என்பதும், எத்தனை காலத்துக்கு இவ்வாறு அந்த மருந்தின் ஆற்றல் நீடிக்கும் என்பதும் இன்னும் தெரியவில்லை என்பதால் மருந்தின் அளவை அதிகரித்து, அதை எடுத்துக் கொண்டவருக்கு பக்கவிளைவை ஏற்படுத்தாமல் இருக்கிறதா என்பதை பார்ப்பது அவசியமாகும். பக்க விளைவு ஏற்படாவிட்டால் அளவை அதிகமாக செலுத்தலாம்.
முதல் வெற்றி
இதன்மூலம், வைரஸ் தாக்குதல் நம்மை நீண்டகாலத்திற்கு அண்டாமல் இருக்க செய்ய முடியும் என்பதால், இதுபோன்ற மருந்து டோஸ் அதிகரித்து செய்யக்கூடிய சோதனையும் முக்கியத்துவம் பெறுகிறது. எது எப்படி இருந்தாலும் சரி, முதல் முறையாக ஒரு தடுப்பு மருந்து மனிதர்களிடம் வெற்றி பெற்றுள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறைந்த அளவுக்கு டோஸ் கொடுக்கப்பட்டு, அது நோய்களை தடுக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இதையே, உலகம் முழுக்க, மனிதர்களுக்கு பயன்படுத்தி பின்னர் டோஸ் அளவை அதிகரித்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இது கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில், முக்கியமான, முதல் வெற்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.