இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு.. மக்களை கவர்ந்த ஜோ பிடனின் மாஸ் பேச்சு!
வாஷிங்டன்: இனி, எந்தப் பிரிவினையுமின்றி வாய்ப்புகளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து ஒன்றிணைந்து செயல்பட்டு, எல்லோருக்குமான அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமனுக்குமான அதிபராகப் பணியாற்றுவேன் என்று அமெரிக்க அதிபராகும் ஜோ பிடன் பேசியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த நவம்பர் 3ம்தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை வீழ்த்தி ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அமெரிக்காவின் ஆளும் கட்சியாக மாறி உள்ளது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், ஜோ பிடன் ஆற்றிய வெற்றி உரையில், மக்களை பிளவுப்படுத்த மாட்டேன் என்றும் அனைவருக்குமான அதிபராக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவை மீட்டெடுப்போம்
தனது சொந்த ஊரான டெலாவரின் வில்மிங்க்டன் பகுதியில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் பேசிய ஜோ பைடன், ``ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது.
நம்பிக்கையை காப்பாற்றுவேன்
கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடியதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. இன்று அமெரிக்காவுக்கு புதியதோர் விடியல் பிறந்துள்ளது. நாட்டு மக்கள் இந்த வெற்றியின் மூலம், தங்கள் குரலை வெளிப்படுத்தி உள்ளார்கள். எந்த பேதமுமின்றி மக்கள் அனைவரும் ஒன்றிணைத்து, உங்கள் அனைவருக்கான அதிபராக செயல்படுவேன். என்னை ஆதரித்த உங்களுக்கு நன்றி. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் நான் காப்பாற்றுவேன். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த நாம் சேர்ந்து உழைப்போம். கொரோனா காலத்திலும் நமது வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அறிவியல் பூர்வ திட்டம்
நான் தேர்தல் விவாதங்களில் வாக்குறுதியளித்தபடி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன். நாட்டு மக்களை பாதுகப்பாக வைத்திருப்பதே என்னுடைய முதல் இலக்கு. நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல்பூர்வமாகவே செயல்படுத்தப்படும்.
பிரிவினை இருக்காது
இனி, எந்தப் பிரிவினையுமின்றி வாய்ப்புகளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து ஒன்றிணைந்து செயல்பட்டு, எல்லோருக்குமான அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமனுக்குமான அதிபராகப் பணியாற்றுவேன்" இவ்வாறு கூறினார்.
வாழ்த்துக்கள்
ஒரு நாட்டின் தலைவர் எல்லோருக்குமானவர் ஆவார். இதேபோல் எந்த பிரிவினையுமின்றி அனைவரையும் அரவணைத்து பணியாற்ற வேண்டும். இதை தான் தான் செய்யப்போவதாக ஜோ பிடன் கூறியிருப்பது அந்நாட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் வேண்டியவர், இவர் வேண்டாதவர் என பிரிவினை இல்லாத, அனைவருக்குமான அமெரிக்க தலைவராகும் ஜோ பிடனுக்கு வாழ்த்துக்கள்.