புல்வாமா குற்றவாளிகளை பிடிங்க.. அப்படியே ஒற்றுமையாக இருங்க... இந்தியா, பாக்.கிற்கு டிரம்ப் அட்வைஸ்
Recommended Video
வாஷிங்டன்:புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய குற்றவாளிகளை கண்டுபிடித்து, பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.உலகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:புல்வாமா தாக்குதலால் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. நான் அங்குள்ள சூழ்நிலைகளை கவனித்து வருகிறேன்.
அது குறித்து நிறைய அறிக்கைகள் வந்துள்ளன. அந்த அறிக்கைகள் குறித்து சரியான நேரத்தில் கருத்து தெரிவிப்பேன். இந்த தாக்குதலில் தொடர்புடைவர்களை கண்டுபிடித்து பாகிஸ்தான் தண்டிக்கவேண்டும். அதே நேரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ட்ரம்ப் கூறினார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு அலோசகர் ஜான் போல்டன், செயலாலர் மைக் போம்பியோ மற்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா ஆகியோர் தனித்தனியாக பாகிஸ்தானை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். அதில் ஜெயிஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.