ஹேக் செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெப்சைட்.. ஹேக்கர்கள் என்ன எழுதி வச்சிட்டாங்க தெரியுமா? ஹையோ ஹையோ
வாஷிங்டன்: ஆனானப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தரப்பு நிர்வகித்துவரும், தேர்தல் பிரச்சார வெப்சைட் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
donaldjtrump.com என்ற பெயரில் ஒரு வெப்சைட் நடத்தப்பட்டு, அதில் டொனால்ட் ட்ரம்ப் தரப்பின் பிரச்சாரங்கள் கருத்துக்கள் உள்ளிட்டவை பகிரப்பட்டு வந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக டொனால்ட் ட்ரம்ப் தரப்பு நிர்வகித்துவரும் வெப்சைட் இதுவாகும்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வெப்சைட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில், டொனால்ட் ட்ரம்ப்பை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப்பால், தினமும் ஏகப்பட்ட போலி செய்திகள் பரப்பப்பட்டு உலகம் முழுக்க வியாபித்து விட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
போலி செய்திகள்
கொரோனா வைரஸ் தொடர்பாக டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பல கருத்துக்களைக் கூறி வந்தார். கிருமி நாசினிகள் வைரஸை கொல்ல முடியும் எனும்போது இது வரை கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்காமல் இருக்கிறீர்களே என்று உலக விஞ்ஞானிகளுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், மலேரியாவுக்கு பயன்படுத்தும் மாத்திரையை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று அவர் கூறி வந்தார். இவ்வாறு பல்வேறு கருத்துக்களும் போலியானவை என்று பிறகு தெரிய வந்தது. இந்த நிலையில்தான் யாரோ விஷமிகள் இவரது வெப்சைட்டை ஹேக் செய்து, போலி செய்தியாளர், என்று பொருள்படும் வகையில் கிண்டல் செய்துள்ளனர்.
நிலைமை திரும்பியது
இந்த மெசேஜை பார்த்த பிறகு உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய டொனால்டு டிரம்ப் குழு, மறுபடியும் வெப்சைட்டை பழைய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது. இது யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது பற்றி போலீஸ் உதவியுடன் விசாரணை துவங்கியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரக் குழு தெரிவிக்கிறது.
பணம் கேட்டனர்
வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது மட்டுமின்றி, டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது உறவினர்கள் தொடர்பான ரகசிய தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதில் ஹேக்கர்கள் எழுதியுள்ளனர். அந்த விவரங்களை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், கிரிப்டோகரன்சி முறையில் தங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.