சண்டை போடனுமா? உங்களுக்கு டைம் நெருங்கிடுச்சு.. அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்காவுடன் சண்டையிட நினைத்தால் அதுவே ஈரானின் முடிவாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக, டொலான்டு டிரம்ப் பதவியேற்ற பின், மத்திய கிழக்கு நாடான, ஈரானுக்கு எதிராக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ட்ரம்ப், ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்தார்.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதித்தார். மேலும், வளைகுடா கடல் பகுதிகளில், அமெரிக்க போர் கப்பல்களை, போர் விமானங்களை நிறுத்தியுள்ளார் அதிபர் டிரம்ப்.
நாடு திரும்ப அழைப்பு
மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களையும் உடனடியாக நாடு திரும்புமாறு அதிபர் ட்ரம்ப் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். இதனால் ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
அமெரிக்கா எச்சரிக்கை
அண்மையில் ஜப்பான் வருகை தந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என்றார். இதைத்தொடர்ந்து உலகின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளுக்கு பயணம் செய்யும் முக்கிய வழியான வளைகுடாவின் வான்வழித்தடங்களில் பயணம் செய்யும் விமானங்களுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மிரட்டல்
அதற்கு பதிலடியாக, 'அணுசக்தி ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடிக்கப் போவதில்லை' என, ஈரானும் மிரட்டல் விடுத்துள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது, ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே, போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
|
ஈரானின் முடிவு
இந்நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், தன், 'ட்விட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:எங்களுடன் சண்டையிட நினைத்தால், அதுவே ஈரானின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது. இவ்வாறு, அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
எதில் போய் முடியுமோ
ஈரான்- அமெரிக்கா இடையேயான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எதில் போய் முடியுமோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.