அமெரிக்காவின் 46வது அதிபராக ஜன 20ல் பதவியேற்கும் ஜோ பிடன் - வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு
அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பிடன் 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க வெள்ளை மாளிகை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20ஆம் தேதி ஜோ பிடன் பதவியேற்க உள்ளார். இதனையொட்டி டிரம்ப் ஆதரவாளர்களால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வாரம் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் உள்ள கேப்பிடல் ஹில் பகுதியில் டிரம்ப் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறை உலக அரங்கில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியில் நிகழ்ந்த கருப்பு சம்பவமாகும்.
அமெரிக்க அதிபராக ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் 20 ஆம் தேதி நாட்டின் 46வது அதிபராக பதவியேற்கப் போகிறார் ஜோ பிடன். அமெரிக்க அதிபர் நாற்காலியில் இருந்து இறங்கும் டிரம்ப், வெள்ளை மாளிகையையும் காலி செய்யப் போகிறார்.
பதவியேற்பு நாளில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்கும் வகையில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் காவலில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் ஹில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு நிகழ்ச்சி பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்று துணை அதிபரி மைக் பென்ஸ் உறுதியளித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் இந்தியா.. பொருளாதார தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தும் அமெரிக்கா
வாஷிங்டனின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர், அதிபர் பதவியேற்பு முடிந்த பின்னரும் பல நாட்களுக்கு பாதுகாப்பு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள பல்வேறு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வாஷிங்டனில் உள்ள நேஷனல் மால் உள்ளிட்ட பல வணிக வளாகங்கள் வரும் 21ஆம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிடன் பதவியேற்பு நாளில் 25000 படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.