சீனா வர்த்தக தொடர்புகள்.. ஜோ பிடன் மகனிடம் விசாரணை தீவிரம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன் (ஜோ பைடன்) மகன் ஹன்ட்டர் பைடன் வரி தொடர்பான விவகாரத்தில் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹன்ட்டர் பைடனின் சீனா வர்த்தக தொடர்புகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனவாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பிடனின் வெற்றியை ஏற்க முடியாது என தொடக்கத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் அடம்பிடித்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அதிகார மாற்றத்துக்கும் டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டார். அண்மையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் அடுத்த அதிபர் தேர்தலிலும் தாம் போட்டியிட உள்ளதாக சூசகமாக தெரிவித்தார்.
இதனிடையே புதிய அதிபராக உள்ள ஜோ பிடன் பல்வேறு குழுக்களையும் நியமித்து வருகிறார். இந்த நிலையில் ஜோ பிடனின் மகன் ஹன்ட்டர் வரி விவகாரம் ஒன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் உள்ள ஹன்ட்டர் பைடனின் வர்த்தக தொடர்புகள் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டு முதல் அதாவது ஜோபிடன், அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த விசாரணைகள் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
டெல்வேர் அரசு அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனராம். இருப்பினும் இந்த விசாரணை தொடர்பான விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.