அமெரிக்க அதிபர் தேர்தலில் 9 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு - மகுடம் சூடப்போவது யார்?
அமெரிக்க அதிபரை தேர்வு செய்ய இதுவரை சுமார் 9 கோடி பேர் வாக்களித்து விட்டனராம். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இப்படி ஆர்வமாக வந்து வாக்களித்தது இல்லை என்று சொல்லப்படுகிறது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது. நாளை நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதிபரை தேர்வு செய்ய இதுவரை சுமார் 9 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இப்படி ஆர்வமாக வந்து வாக்களித்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. மகுடம் சூட்டப்போவது யார் என்று இன்னும் ஒரு நாளில் தெரிந்து விடும்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறித்த பேச்சுகள் ஒருபக்கமும், அதிபர் தேர்தல் குறித்து ஒரு பக்கமும் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டப்போகிறது. இரண்டு லட்சத்திற்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு இடையே அடுத்த அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டிக்கான களத்தில் இருக்கிறார்.ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். இவர் முன்னாள் துணை அதிபராவார்.
துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடைசி கட்ட பிரச்சார கூட்டங்களில் வேட்பாளர்கள் பேசியதில் அனல் பறந்தது கடந்த நான்கு ஆண்டுகளாக வெறுப்பை விதைத்து, நாட்டை பிளவுப்படுத்திய அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்' என்றும் 'ட்ரம்ப் நீங்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்பதாகவும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் டெட்ராய்ட் நகரத்தில் பிரசாரம் செய்கையில் பேசியிருக்கிறார்.
டிரம்ப் நடத்திய 18 தேர்தல் பிரசாரங்களால் 30,000 பேருக்கு கொரோனா- 700 பேர் பலி- பகீர் ரிப்போர்ட்
ட்ரம்ப் தேர்தல் பிரசாரம் செய்த 18 இடங்களில் ஆய்வு செய்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், அக்கூட்டங்கள் மூலம் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றாகி, 700 பேர் பலியாகியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க சட்டப்படி முன்கூட்டியே வாக்களிக்கலாம். அதன்படி ஏற்கெனவே டொனால்டு ட்ரம்பும் ஜோ பைடனும் வாக்களித்து விட்டனர். அதைபோல அமெரிக்க மக்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர். இதுவரை சுமார் 9 கோடி பேர் வாக்களித்து விட்டனராம். இப்படி ஆர்வமாக வந்து வாக்களித்தது இதுவரை இல்லைஎன்று சொல்லப்படுகிறது. அதிலும் கொரோனா நோய்த் தொற்று பரவும் காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களிப்பது ஆச்சர்யம்தான். இம்முறை கிட்டத்தட்ட 15 கோடி அல்லது 16 கோடி பேர் வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவு முடிந்ததும், முதலில் நேரில் வாக்களித்தவர்களின் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பிறகு தபால் ஓட்டுகள், முன்கூட்டியே வாக்களித்தவர்களின் ஓட்டும் எண்ணப்படும். இம்முறை ஏராளமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதால், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு என பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நடக்கும் இத்தேர்தலில் வெல்லப்போவது அதிபர் ட்ரம்ப்பா அல்லது எதிர்க்கட்சியின் ஜோ பிடனா என்பது இன்னும் ஓரு நாளில் தெரிந்து விடும்.