அய்யோ சோகம்.. டிரம்ப்புக்கு இன்னொரு அடி.. கைவிரித்த அமெரிக்க அட்டர்னி ஜெனரல்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கான வாக்குப்பதிவு மோசடிக்கான ஆதாரங்களை நீதித்துறை கண்டுபிடிக்கவில்லை என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.
மோசடி மூலம் தன்னுடைய தேர்தல் வெற்றியை அபகரித்துவிட்டார்கள் என்று பலமுறை டொனால்ட் ட்ரம்ப் புலம்பி வருகிறார், அதிபராக ஜோ பிடன் வெற்றி பெற்றதையும். தான் தோற்றதையம் ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார்.
டிசம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. அதன்பிறகு ட்ரம்ப்பால் எதுவும் செய்ய இயலாது. அதிபர் பதவியை துறந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறித்தான் ஆக வேண்டும் என்கிற நிலை ஏற்படும்.
முக்கியத்துவம்
இந்த சூழலில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறப்படுவதற்காக போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
புகார்கள்
அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு வில்லியம் பார் அளித்த பேட்டியில், அமெரிக்க வக்கீல்கள் மற்றும் எஃப்.பி.ஐ நிர்வாகிகள் தங்களுக்கு கிடைத்த குறிப்பிட்ட புகார்கள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு
பணியாற்றி வருகிறார்கள், ஆனால் தேர்தலின் முடிவை மாற்றும் அளவுக்கு எந்த ஆதாரத்தையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. "அதாவது இன்று வரை, தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு மோசடியை நாங்கள் காணவில்லை' என்றார்.
மோசடி நடைபெறும்
இப்படியான கருத்தை வெளிப்படுத்தி இருப்பது டிரம்பின் தீவிர ஆதரவாளர் வில்லியம் பார். இவர் தான் அதிபர் தேர்தலுக்கு முன்னர், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் காரணமாக மெயில்-இன் வாக்குகளில் (அஞ்சல் வாக்குகள்) மோசடி நடைபெற வாய்ப்புள்ளது என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தவர்.
அனுமதி
அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் பிடன் பெரும்பான்மைக்கு அதிக இடங்கள் கிடைத்த பின்னர், வில்லியம் பார் தான், நாடு முழுவதும் உள்ள அமெரிக்க அரசு வக்கீல்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இதன்படி அதிபர் தேர்தலில் வெற்றி சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்னர், வாக்களிப்பு முறைகேடுகள் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டுகளையும் உடனடியாக வழக்குகளாக தொடருங்கள் என்று அனுமதித்தார்,
ஒப்புக்கொண்டார்
ஆனால் அப்படி தொடரப்பட்ட பல வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லையென நிராகரித்தது. இப்போது வில்லியம் பாரே ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை என்று கைவிரித்துள்ளார். இதன் மூலம் டிரம்ப் தோல்வி உறுதியாகி உள்ளது டிசம்பர் 14ம் தேதி இதற்கான விடை தெரிந்துவிடும்.