தம்பி செய்யும்போது அண்ணன் செய்ய வேண்டாமா? இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா... எதற்கு?
வாஷிங்டன்: சீன ஆப்பான டிக் டாக் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
இந்தியா கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவின் 59 ஆப்களை தடை செய்தது. இதையடுத்து அமெரிக்காவும் டிக் டாக் ஆப் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதுகுறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்து இருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ''அதிபர் இதுகுறித்து இதுவரை பேசவில்லை. கண்டிப்பாக டிக் டாக் ஆப் தடை செய்வது குறித்து நிச்சயமாக ஆலோசிக்க உள்ளோம்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கல்வானில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் இந்தியாவில் செயல்படும் 59 சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அதில் ஒன்று டிக் டாக். இதற்கு இந்தியாவில் 120 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இந்தியா தடை செய்த பின்னர், ''தனிப்பட்ட முறையில் டிக் டாக் இயக்கப்படுகிறது. சீன அரசுடன் எந்த தொடர்பும் டிக் டாக் நிறுவனத்திற்கு இல்லை'' என்று பைட்டான்ஸ் விளக்கம் அளித்து இருந்தது.
மிகமோசமான உச்சம் - யு.எஸ்-ல் ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா! தென்னாப்பிரிக்காவில் விஸ்வரூபம்
தற்போது அந்த வரிசையில் அமெரிக்காவும் இணைந்து கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா தெளிவாக கூறி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'சீன வைரஸ்' என்றும் அழைத்தார். இத்துடன் ஹாங்காங் மீது சீனாவின் ஆதிக்கம், அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப்போர் என்று அனைத்தும், தற்போது அமெரிக்காவையும் யோசிக்க வைத்துள்ளது. மேலும், அந்த நாட்டில் நடப்பாண்டில் அதிபருக்கான தேர்தல் நடைபெற இருப்பதால், சீனாவின் மீது வர்த்தக ரீதியில் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க அதிபர் இருக்கிறார்.
இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டியளித்து இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ, ''டிக் டாக் ஆப் தடை செய்வது குறித்து நிச்சயமாக ஆலோசித்து வருகிறோம். அதிபரின் வார்த்தைக்கு காத்துக் கொண்டு இருக்கிறோம்'' என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் ட்ரம்ப் முன் வந்து டிக் டாக் ஆப்பை அமெரிக்காவிலும் தடை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டிக் டாக் ஆப்க்கு 65-80 மில்லியன் பயனாளர்கள் ஒவ்வொரு மாதமும் உள்ளனர். அமெரிக்காவில் இந்த ஆப்பை 175 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். உலக அளவில் 1 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர்.
டிக் டாக்:
சீனாவில் இருந்து இந்த டிக் டாக் ஆப் இயக்கப்படுகிறது. பயனாளர்களின் விவரங்கள் அனைத்தும் டிக் டாக் நிறுவனத்திடம்தான் இருக்கிறது, சீன அரசுக்கும் இந்த நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், இதுபோன்ற நிறுவனங்கள் சீன அரசிடம் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆதலால், பயனாளர்களின் விவரங்கள் திருடப்படும் என்று அமெரிக்கா உள்பட மற்ற நாடுகள் கருதுகின்றன. பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது டிக்டாக் ஆப். இதன் நிறுவனர் ஸாங் யிமிங்.
ஹாங்காங்கில் புதிய சட்டங்களை சீனா கொண்டு வந்த பின்னர் அங்கிருந்து வெளியேற இருப்பதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிக் டாக் உடன் சேர்த்து பைட்டான்ஸுக்கு சொந்தமான விகோ வீடியோ, ஹலோ ஆகிய ஆப்களும் தடை செய்யப்பட்டன. இந்த மூன்று ஆப்களை இந்தியா தடை செய்ததால், அந்த நிறுவனத்துக்கு 6 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளது.