நான் தோத்துட்டேன்னு யார் சொன்னது.. பிடன் ஆட்சிக்கு வழிவிட்ட பின்பும்.. முரண்டு பிடிக்கும் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்காமல் டிரம்ப் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறார். பிடன் தேர்தலில் மோசடி செய்து விட்டதாக அவர் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 290 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று, அடுத்த அதிபராக தேர்வாகி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 232 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று, தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
வரும் ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பிடன் பதவி ஏற்க உள்ளார்.
அசத்தல்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக.. அதிக ஓட்டு வாங்கி சாதித்த ஜோ பிடன்
டிரம்ப் பிடிவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்பை தோற்கடித்து, ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றார். பல்வேறு மாகாணங்களில் தோல்வி அடைந்த டிரம்ப், ,தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதம் சாதித்து வருகிறார். நாங்கள் நிறைய இடங்களில் வெற்றி பெற்றோம், வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என அவர் குற்றம் சாட்டி வருகிறார். டிரம்பின் வறட்டு கவுரவத்தால் வெற்றி பெற்று பல வாரங்கள் கடந்த போதிலும் ஜோ பிடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தது.
பைடனுக்கு நம்பிக்கை
இரண்டு நாட்களுக்கு முன்பு மனசு மாறிய டிரம்ப், ஜோ பிடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் பிடனுக்கு நம்பிக்கை பிறந்தது. இந்த நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அந்த மாநில அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை பொறுத்து கொள்ள முடியாத டிரம்ப், மீண்டும் பழைய பல்லவியை பாட ஆரம்பித்தார்.
மோசடி செய்துள்ளார்
பென்சில்வேனியாவின் கெட்டிஸ் பார்க் என்ற இடத்தில் குடியரசு கட்சியின் சட்ட ஆலோசகர்கள் அவசரமாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் பேசிய டிரம்ப், இது நாங்கள் எளிதாக வென்ற தேர்தலாகும், நாங்கள் நிறைய இடங்களில் வென்றுள்ளோம் என தெரிவித்தார். தனது வழக்கறிஞர் ஜென்னா எல்லிஸின் மைக்ரோஃபோன் வைத்திருந்த தொலைபேசி மூலம் சுமார் 11 நிமிடங்கள் அவர் பேசினார். தேர்தலில் பிடன் மோசடி செய்துள்ளார். எனவே தேர்தலைத் திரும்ப பெற வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.
முரண்டு பிடிக்கிறார்
அதிபர் தேர்தலில் எந்த மோசடியும் நடைபெறவில்லை என மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் கூறியுள்ளனர். தேசிய பொதுசேவை நிர்வாக குழுவும் பிடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதம் தெரிவித்தது. இது தொடர்பாக பல்வேறு போராட்டம் நடத்தியும், சட்ட போராட்டம் நடத்தியும் டிரம்பால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் அவர் தோல்வியை ஏற்காமல் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறார்.