சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தி டிரம்ப்: மீண்டும் வர்த்தக போர் அபாயம்!
வாஷிங்டன்: சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை கணிசமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால், அமெரிக்கா - சீனா இடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போரை தணிப்பதற்கான முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. கடந்த ஓர் ஆண்டாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரில் நடந்து வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் சீன துணை பிரதமர் லியு ஹி உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழு பங்கேற்றுள்ளது. இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் ஆரம்ப கட்டத்திலிருந்து பேரம் பேசுவதற்கு சீனா முயல்வதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி இருக்கிறார்.
சீனாவின் மீது கடும் கோபமாக பேசிய டிரம்ப், அத்தோடு நிற்காமல் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத வரியை இன்று முதல் 25 சதவீதமாக அதிகரிப்பதாக அதிரடியாக அறிவித்தார். இது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையாக அமையும் என்று தெரிகிறது.
"இரு நாடுகளுக்கு இடையிலான முறைப்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் இருக்கும்போது சீனா மீண்டும் துவக்கத்திலிருந்து பேரம் பேச முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று டிரம்ப் ஆவேசமாக கூறி இருக்கிறார்.
சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தினால், பதிலுக்கு நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என்று சீனாவும் கூறி இருக்கிறது. இதனால், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் மீண்டும் மூண்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் முறையற்ற ஏற்றுமதி மற்றும் வர்த்தக கொள்கைகளால் அமெரிக்காவின் வர்த்தகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார்.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனாவும் இறக்குமதி வரியை கணிசமாக உயர்த்தியது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விவகாரம் உலக பொருளாதாரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இடையே சந்திப்பு நடந்தது. அப்போது, இறக்குமதி வரி பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போரை நிறுத்தி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், டிரம்பின் அதிரடி அறிவிப்பு சீனாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
"அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப்போர் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும்,, அது கடுமையான பாதிப்புகளையும், சவால்களையும் கொடுக்கும்," என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவர் கிற்ஸ்டைன் லகார்டு எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று அவசர கதியில் முடிவு எடுக்காது என்று நம்புகிறேன். இரு நாடுகளும் இப்பிரச்னையை சுமூக தீர்வு காண்பதே உலக பொருளாதாரத்திற்கு சிறப்பானதாக அமையும் என்று லகார்டு கூறி உள்ளார்.