வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்... ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை..!
வாஷிங்டன்: 45-வது அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் தனது குடும்பத்தினரோடு வெளியேறினார்.
இன்னும் சில மணி நேரங்களில் ஜோ பிடன் அமெரிக்காவின் 46-வது அதிபராகவும், கமலா ஹாரிஸ் 49-வது துணை அதிபராகவும் பதவியேற்றுக் கொள்ள உள்ளார்கள். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை.
இது 100 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. டிரம்பிடம் சகிப்புத்தன்மை துளியும் இல்லை என்பது இதன் மூலம் உலகம் அறிந்துள்ளது. இதனிடையே டிரம்பின் வறட்டு பிடிவாதத்தால் அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு அலைகள் உருவாகியுள்ளன.
இதனால் விரைவில் குடியரசுக் கட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு தேசபக்தி கட்சி (பேட்ரியாட் பார்ட்டி) தொடங்குவது குறித்த ஆலோசனையில் அவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் தான் இதுவரை உள்ளன. இந்நிலையில் டிரம்ப் தொடங்க உள்ள புதிய கட்சி எந்தளவு சோபிக்க முடியும் என்பது பற்றிய விவரம் இல்லை.
மணமாலையும் மஞ்சளும் சூடி.. கடைசி நாளில் டிரம்ப் மகள் நிச்சயதார்த்தம்!
வெள்ளை மாளிகையில் இருந்து விடைபெறுவதற்கு முன்னர் அமெரிக்க அதிபர் பாதுகாப்புக்கான அணு ஆயுத பெட்டியை முறைப்படி திரும்ப ஒப்படைத்துவிட்டார் டிரம்ப். இனி அந்த அணு ஆயுத பெட்டி ஜோ பிடனின் பாதுகாப்பு அம்சங்களில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கூட்டு விமானப்படை தளத்தில் உருக்கமுடன் பேசிய டிரம்ப், கடந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். மேலும், 9 மாதங்களில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி மருத்துவ பேரதிசியத்தை அமெரிக்கா நிகழ்த்தியதாக பெருமிதம் தெரிவித்தார். நான் மக்களுக்காக என்றும் போராடுவேன் என்றும் தொடர்ந்து கண்காணிப்பேன் எனவும் புதிய அரசின் நிர்வாகம் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துகிறேன் எனவும் டிரம்ப் உருக்கமுடன் கூறி விடைபெற்றார்.