ஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்!!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் ஒரு மாதத்திற்குள் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் கொரோனா வைரஸ் தானாக மறைந்து விடும் என்று ஆருடம் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம். சில வாரங்களில், அதாவது இன்னும் மூன்று வாரங்களில் அல்லது நான்கு வாரங்களில் மனித பயன்பாட்டுக்கு தடுப்பு மருந்து வந்துவிடும்'' என்று தெரிவித்துள்ளார்.
ஏபிசிக்கு பேட்டி அளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக பாக்ஸ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்தப் பேட்டியில், ''நான்கு அல்லது எட்டு வாரத்தில் கொரோனா தடுப்பு மருந்து மனித பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவித்து இருந்தார். பேட்டி கொடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விமர்சனம் வைத்து இருக்கும் ஜனநாயகக் கட்சி, சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது ட்ரம்ப் தொடர்ந்து தனது அழுத்தத்தை கொடுத்து வருகிறார். நவம்பர் 3 ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் வர இருப்பதால் அதற்குள் எப்படியாவது தடுப்பு மருந்து கொண்டு வந்து, வாக்குகளை பெற வேண்டும் என்று முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் இந்த தடுப்பு மருந்து தயாரிப்பில் அரசு சார்பில் ஈடுபட்டு இருக்கும் மருத்துவர் ஆன்டனி பாசி கூறுகையில், ''நடப்பாண்டு இறுதியில்தான் கொரோனா தடுப்பு மருந்து மனித பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
நேர்மையற்ற மீடியா... இந்தியப் பிரதமர் மோடி என்னை பாராட்டினார்... ட்ரம்ப் பெருமிதம்!!
சமீபத்தில் செய்தியாளர் பாப் வுட்வார்டு எழுதி இருந்த ரேஜ் என்ற புத்தகத்துக்கு ட்ரம்ப் பேட்டி அளித்து இருந்தார். அதில், ''அமெரிக்க மக்கள் அஞ்சிவிடுவார்கள் என்பதற்காக கொரோனாவின் உண்மையான தாக்கத்தை நான் கூறவில்லை. ஆனால், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனக்கு முன்பே தெரியும்'' என்று கூறி இருந்தார்.