அதிபர் பதவியை...உணராதவர் ட்ரம்ப்...ஜோ..கமலாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் ஆதரித்து பேசியுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில் ஜோ பைடனுக்கு வாக்களியுங்கள். அதிபர் பதவியை இன்னும் ட்ரம்ப் உணரவில்லை. அவராலும் முடியவும் முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபருக்கான களத்தில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபருக்கான போட்டியில் ஜோ பைடனும், துணை அதிபருக்கான போட்டியில் கமலா ஹாரிஸூம் போட்டியிடுகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல்லி ஒபாமா பேசிய வீடியோ வெளியாகி இருந்தது. அதில், அதிபராக இருப்பதற்கே ஒபாமா தகுதியற்றவர் என்று மிச்செல்லி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஒபாமாவும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசியுள்ளார். அவர் தனது பேச்சில், '' டொனால்ட் ட்ரம்ப் அரசு பணிகளில் ஈடுபடுவதில் அக்கறை காட்டவில்லை; பொதுவான மக்கள் தளத்தில் நிற்பதற்கு ஆர்வம் செலுத்தவில்லை. தனக்கும் தனது நண்பர்களுக்கும் தவிர வேறு எவருக்கும் அவரோ, அவரது அலுவலகமோ உதவ முன்வரவில்லை. ஜனாதிபதி பதவியை அலங்கரிக்க, கவுரவிக்க அவர் விரும்பவில்லை. மாறாக, ரியாலிட்டி ஷோ மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸூக்கு 1,70,000 பேர் உயிரிழந்து உள்ளனர். மில்லியன் கணக்கில் வேலையை இழந்துள்ளனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாட்டின் ஜனநாயகத்தையும், அதன் கொள்கைகளையும் குறைத்துள்ளார். தற்போது அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் ஜனநாயகத்தை மதித்து நடந்து கொள்வார்கள். பைடன் எனக்கு சகோதரர் போன்றவர்.
நான் நாட்டின் அதிபராக எட்டு ஆண்டுகள் இருந்தேன். அப்போது நான் எடுத்த ஒவ்வொரு முக்கிய முடிவுகளின்போது, ஜோ பைடன் என்னுடன் இருந்தார். துணை அதிபராக இருந்தார். என்னை சிறந்த அதிபராக உருவாக்கியவர். சிறந்த நாடாக உருவாக்கும் அனுபவம் அவருக்கு இருக்கிறது.
அனைத்து மக்களாலும் தேர்வு செய்யப்படுபவர்தான் நாட்டின் அதிபர். அந்தப் பதவியை உணர்ந்து 330 மில்லியன் மக்களின் பாதுகாப்புக்கும், நலத்திற்கும் உழைக்க வேண்டும். அவர்தான் அதிபராக இருக்க முடியும். மேலும் அவர் இந்த நாட்டின் ஜனநாயகத்தின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும்.
இனவாதத்தை ஒழிக்க எந்த தடுப்பூசியும் கிடையாது.. அமெரிக்காவின் முக்கிய பிரச்சினையை கையிலெடுத்த கமலா
உங்களது அதிகாரத்தை பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். உங்களது ஜனநாயகத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டாம். இப்போதே யாருக்கும் வாக்களிக்க இருக்கிறோம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்'' என்றார்.
பொதுவாக அமெரிக்காவில் முன்னாள், இந்நாள் அதிபர்கள் தங்களுக்குள் விமர்சித்துக் கொள்வது இல்லை. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அபூர்வமாக ட்ரம்ப்பை ஒபாமா விமர்சித்து வந்துள்ளார். இன்னும் அமெரிக்காவில் ஒபாமாவுக்கு சிறந்த அதிபர் என்ற பெயர் இருப்பதால், அவரது பிரச்சாரம் ஜனநாயக் கட்சிக்கு வாக்கு சேர்க்கும் என்ற நம்பிக்கையில் அந்தக் கட்சி உள்ளது.