அங்கேயுமா? பாதியிலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்க டிரம்ப் திட்டமாம்.. எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவின் போதே பாதியிலேயே தாமே வெற்றி பெற்றதாக பொய்யாக அறிவிக்க டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை இரவு வாக்குப் பதிவு தொடங்கி பின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: பணக்கார இந்துத்துவவாதிகளின் பேராதரவை பெற்ற டொனால்ட் டிரம்ப்!
தேர்தலில் கடும் போட்டி
இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே மிக கடுமையான போட்டி நிலவுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் இதை வெளிப்படுத்தி இருக்கின்றன.
வெற்றி பெற்றதாக அறிவிப்பு?
இருப்பினும் தேர்தல் நெருங்கும் நிலையில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வரும் கருத்துகள் இப்போதே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாதியிலேயே தாம் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம் டொனால்ட் டிரம்ப்.
குழப்பத்துக்கு வாய்ப்பு?
அமெரிக்காவில் இந்தியாவைப் போல ஒரே மாதிரியான நேரத்தில் வாக்குப் பதிவு, எண்ணிக்கை சாத்தியமில்லை. நேரங்கள் வேறுபடுவதால் சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது சில இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கி இருக்கும். டொனால்ட் டிரம்ப் இப்படி அறிவித்தால் மிக மோசமான குழப்பங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
உச்சகட்ட பரபரப்பு
ஆனால் இப்படி எல்லாம் தாம் எதனையும் திட்டமிட்டிருக்கவில்லை என டிரம்ப் மறுப்பும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் தம்மால் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாமல் போனாலும் போகலாம் எனவும் பூடகமாகவும் மிரட்டல் பாணியில் டிரம்ப் கூறியிருக்கிறார். இதனால் அமெரிக்கா அதிபர் தேர்தலில் உச்சகட்ட பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.