எச்-1 பி விசா வழங்க வேண்டாம்.. அமெரிக்க வெளியுறவுத்துறை பரிந்துரை.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு செக்
வாஷிங்டன்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் குறுகிய காலத்திற்கு தங்கியிருந்து பணியாற்ற வழங்கப்படுவது எச் -1 பி விசா. இந்த விசாக்களை வழங்க வேண்டாம் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்கர்களையே அந்த நிறுவனங்கள் பணிக்கு எடுக்கும் சூழல் உருவாகிவிடும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை தக்கவைக்க ட்ரம்ப் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எச் 1 பி விசாக்கள்
இதன் ஒரு நடவடிக்கையாக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்-1.பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகள் பற்றி வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சிறப்புத் தொழில்களுக்கான தற்காலிக வணிக விசாவை வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளதும் இதில் ஒரு அம்சம்தான்.
வேலை வாய்ப்பு
அமெரிக்காவில் சென்று தங்கி தங்கள் வேலைகளை முடிக்க குறுகிய காலத்திற்கு தொழில்நுட்ப வல்லுநர்களை கணிசமான இந்திய நிறுவனங்கள் எச் 1 பி விசாக்களில் அனுப்பி வைக்கின்றன. அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வேலை வாய்ப்பு பிரச்சினை பெரிதாக உருவாகியுள்ளது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
நஷ்ட ஈடு
சில நிறுவனங்கள் எச் 1 பி விசாக்கள் பெறாமல், பி -1 விசாக்களை பெற்று தங்கள் ஊழியர்களை வைத்து பணி செய்கின்றன. இப்படித்தான், 500 இன்போசிஸ் ஊழியர்கள், நிறுவனத்தால் வழங்கப்பட்ட பி -1 விசாக்கள் மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல், இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக 800,000 டாலர் நஷ்ட ஈடு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊதிய உயர்வு
ஐடி நிறுவனங்கள் என்று கிடையாது, டாக்டர்களும் எச் 1 பி விசாக்களில் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுகிறார்கள். ஆனால் ட்ரம்ப் நிர்வாகம், இந்த விசாக்களில் தங்கியுள்ளோருக்கு 40 சதவீத ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்து ஊழியர்களை அழைத்து வந்து அமெரிக்காவில் தங்க வைத்து பணியாற்ற வைப்பதில் நிறுவனங்களுக்கு லாபம் குறைந்துவிடும். எனவே அமெரிக்கர்களையே அந்த பணிக்கு நியமிப்பார்கள். இதனால் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்.