சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுக.. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை அதிரடி தீர்மானம்.. சாதித்த தேன்மொழி
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த நகர கவுன்சில்களில் ஒன்றான சியாட்டில் நகர சபை, இந்தியாவின் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றைக் கண்டித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
சியாட்டில் வந்தாரை வரவேற்கும் நகரமாக உள்ளதை நினைவுபடுத்திய அந்த தீர்மானம், மதம் மற்றும் ஜாதியை முன்னிறுத்தாமல், இந்த நகரில் வசிக்கும் தெற்காசிய சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுவதாகவும் கூறியிருந்தது.
"சியாட்டில் நகர சபை தேசிய குடிமக்களின் பதிவு மற்றும் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது. மேலும் இந்த சட்டங்கள், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட ஜாதிகள், பெண்கள், பழங்குடியினர் மற்றும் பிற சாமானிய மக்களுக்கு பாகுபாட்டை காட்டுகிறது " என்று தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
காத்திருக்கிறோம்.. விரைவில் பதிலடி கொடுப்போம்.. தமிழக போலீஸாருக்கு பயங்கரவாதிகள் தமிழில் மிரட்டல்
அரசியலமைப்பு
இந்திய அமெரிக்கரும், நகர சபை உறுப்பினருமான க்ஷாமா சாவந்த் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். CAAவை ரத்து செய்வதன் மூலம் இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டும், குடிமக்களின் தேசிய பதிவேட்டை நிறுத்த வேண்டும், அகதிகள் தொடர்பான பல்வேறு ஐ.நா. ஒப்பந்தங்களை அங்கீகரிப்பதன் மூலம் அகதிகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்றத்தை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
சர்வதேச சமூகம்
CAAவை கண்டிப்பதன் மூலம், சியாட்டில் சிட்டியின் பன்மைத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் அனைவருக்கும் எடுத்துக் காட்ட வேண்டும். இந்தியா வெறுப்பு மற்றும் மதவெறி ஆகியவற்றில் ஈடுபட முடியாது. ஒருபக்கம் அப்படி செய்தபடியே, சர்வதேச சமூகம் தங்களை ஏற்க வேண்டும் என்றும் நினைக்க முடியாது, என்று இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் அஹ்சன் கான் தீர்மானத்தின் மீதான உரையில் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
|
தேன்மொழி
தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க சமூகத்தை ஒருங்கிணைப்பதில், Equality Labs அமைப்பின், தேன்மொழி சவுந்தர்ராஜன் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதன் செயல் இயக்குநர் பொறுப்பில் இருப்பவர்தான் தேன்மொழி சவுந்தர்ராஜன். இந்த தீர்மானத்த அவர் வரவேற்றார். "சியாட்டில் நகர சபை இன்று வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்பதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். CAAக்கு எதிரான உலகளாவிய கூக்குரலில் தார்மீக ஒருமித்த கருத்தை சியாட்டில் வழிநடத்துகிறது," என்று அவர் பெருமிதத்தோடு கூறினார்.
வலியுறுத்தல்
இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான அமைப்புகளை சேர்ந்தவர்கள், சியாட்டில் நகர சபை உறுப்பினர்களை, மின்னஞ்சல் மூலம் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது அமெரிக்காவிலுள்ள பிற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.
பொறுப்பு
"இந்தியாவில் ஆளும் கட்சிக்கு டிரம்ப் ஆதரவாக உள்ளார். முஸ்லீம்களுக்கு தடை மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான போர் நூற்றுக்கணக்கான மில்லியன் சிறுபான்மையினரை பாதிக்கிறது. இதுபோன்ற காலகட்டத்தில், அமெரிக்கர்களுக்கு இந்த மனித உரிமை நெருக்கடி பற்றி பேச ஒரு தனித்துவமான பொறுப்பு உள்ளது. சியாட்டில் இதற்கு வழிவகுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்று தேன்மொழி கூறினார்.
யார் இந்த தேன்மொழி
தேன்மொழி சவுந்தரராஜனின் பெற்றோர் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு ஜாதி பிரிவினரிடையே நடைபெறும் மோதல்களின் வலியை அனுபவித்தவர்கள். தேன்மொழியின் தந்தை ஒரு மருத்துவர், அவரது தாயார் முதல் தலைமுறை பட்டதாரி. பள்ளியில் படிக்கும்போதுதான் தாங்கள் தலித் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தேன்மொழிக்கு தெரியவந்தது. இதன்பிறகு அவர் மனதில் அடுக்கடுக்கான கேள்விகள் எழத் தொடங்கின. ஜாதி அடுக்குகள் எப்படி செயல்படுகிறது, ஏன் ஒடுக்குமுறை நிலவுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவர் மனதில் எழுந்தன. சிறு வயதிலேயே அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தனர்.
பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாக பெண்களுக்கு எதிரான ஜாதி மற்றும் வன்முறை குறித்த ஆவணப்படம் தயாரித்து அசத்தியதோடு, தான் ஒரு தலித் என்று பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இந்த முடிவு பல விளைவுகளை ஏற்படுத்தியதாம். கேம்பஸில் பணியாற்றிய அனைத்து இந்திய பேராசிரியர்களிடமிருந்தும் பாகுபாட்டை எதிர்கொண்டதை தேன்மொழி கவனிக்க தவறவில்லை. தேன்மொழியின் கல்வி ப்ராஜக்ட்களுக்கு அந்த ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்துள்ளனர்.
செல்வாக்கு
தேன்மொழி சவுந்தரராஜன் மனதில் இந்த ஜாதிய பாகுபாடுகள் ஆழமாக பதியத் தொடங்கின. தற்போது அவர், திரைப்பட இயக்குநர், கதைசொல்லி இப்படி பல பரிணாமங்களில் வளர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் தனது அத்தனை நிகழ்வுகளிலும், பாகுபாடுகளை களைய வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை மட்டும் அடிக்கோடிட்டு காட்ட அவர் மறப்பதில்லை. ஈக்வாலிட்டி லேப்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர், Third World Majority அமைப்பின் செயல் இயக்குநர் என, பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். Media Justice Network அமைப்பின் இணை நிறுவனரும் இவரே. அமெரிக்காவில் சுமார் 300 கம்யூனிட்டி அமைப்புகளுடன் இணைந்து இவர் செயலாற்றி வருகிறார். எனவே, சியாட்டில் போன்ற பகுதிகளில், நிர்வாகங்கள் கொள்கை முடிவுகளை எடுப்பதில், தேன்மொழி சவுந்தரராஜ் மற்றும் அவர் சார்ந்த அமைப்புகளின் தாக்கம் அளப்பறியதாக உள்ளது.