இந்தியாவைத் தொடர்ந்து டிக் டாக் ஆப்க்கு செக் வைக்க அமெரிக்காவும் ஆலோசனை!!
வாஷிங்டன்: டிக் டாக் உள்பட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் சீன ஆப்களை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து நிச்சயமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி கொடுத்து இருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ''அதிபரிடம் இதுகுறித்து இதுவரை பேசவில்லை. கண்டிப்பாக டிக் டாக் ஆப்பை ரத்து செய்வது குறித்து நிச்சயமாக ஆலோசிக்க உள்ளோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் இருந்து இந்த டிக் டாக் ஆப் இயக்கப்படுகிறது. பயனீட்டாளர்களின் விவரங்கள் அனைத்தும் டிக் டாக் நிறுவனத்திடம்தான் இருக்கிறது, சீன அரசுக்கும் இந்த நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், இதுபோன்ற நிறுவனங்கள் அரசிடம் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆதலால், பயனீட்டாளர்களின் விவரங்கள் திருடப்படும் என்று அமெரிக்கா உள்பட மற்ற நாடுகள் கருதுகின்றன. பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது டிக்டாக் ஆப். இதன் நிறுவனர் ஸாங் யிமிங்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் இந்தியாவில் செயல்படும் 59 சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அதில் ஒன்று டிக் டாக். இதற்கு இந்தியாவில் அதிகளவில் பயனாளர்கள் உள்ளனர். இந்தியா ரத்து செய்த பின்னர், ''தனிப்பட்ட முறையில் டிக் டாக் இயக்கப்படுகிறது. சீன அரசுடன் எந்த தொடர்பும் டிக் டாக் நிறுவனத்திற்கு இல்லை'' என்று பைட்டான்ஸ் விளக்கம் அளித்து இருந்தது.
தற்போது அந்த வரிசையில் அமெரிக்காவும் இணைந்து கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா தெளிவாக கூறி வருகிறது. இத்துடன் ஹாங்காங் மீது சீனாவின் ஆதிக்கம், அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப்போர் என்று அனைத்தும், தற்போது அமெரிக்காவையும் யோசிக்க வைத்துள்ளது.
சிங்காரி, ரொபோசோ, ஷேர்சாட்.. ம்ஹூம்.. டிக்டாக்கை விட்டு மனசை எடுக்காத இந்தியர்கள்!
ஹாங்காங்கில் புதிய சட்டங்களை சீனா கொண்டு வந்த பின்னர் அங்கிருந்து வெளியேற இருப்பதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிக் டாக் உடன் சேர்த்து பைட்டான்ஸுக்கு சொந்தமான விகோ வீடியோ, ஹெலோ ஆகிய ஆப்களும் தடை செய்யப்பட்டன. இந்த மூன்று ஆப்களை இந்தியா ரத்து செய்ததால், அந்த நிறுவனத்துக்கு 6 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளது.