வளைகுடாவுக்கு போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா.. ஈரானில் சூழும் போர் மேகம்! இந்தியாவிற்கும் தாக்கம்
வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, தனது விமானம் தாங்கி போர் கப்பலை வளைகுடா பகுதிக்கு அனுப்பியுள்ளது பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது காரணமாக, ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
மோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்.. தடுத்த அத்வானி: யஷ்வந்த் சிங் 'ஷாக்' தகவல்
பதிலடி
ஈரான் பண மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறின. எனவே, அமெரிக்காவுக்கு பதிலடி தர ஈரான் முடிவு செய்துவிட்டது. அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தற்காலிகமாக புறக்கணிப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அறிவித்து ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
ஈரான் எச்சரிக்கை
ஒப்பந்தத்தின்படி ஈரானிடம் உள்ள மிகுதியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விற்க வேண்டும் என்ற நிபந்தனையை புறக்கணிப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் இனி ஈரான் ஈடுபடும் என்பதுதான், ஹசன் ருஹானி அறிவிப்பின் சாராம்சமாகும். அமெரிக்காவை தவிர்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் மற்ற 5 நாடுகளும், இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை 60 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தின் மேலும் சில நிபந்தனைகளை ஈரான் மீறும் என்றும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி எச்சரிக்கைவிடுத்தார்.
அணுசக்தி விமானம் தாங்கி போர்க்கப்பல்
இதையடுத்து, ஈரான் நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்தார். இந்த நிலையில்தான், 'யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன்' என்ற அணுசக்தி விமானம் தாங்கி போர்க்கப்பலை வளைகுடா கடற்பகுதிக்கு டொனால்டு டிரம்ப் அனுப்பியுள்ளார். ஏவுகணை பாதுகாப்பு அம்சமும் இதில் அடங்கும்.
பெட்ரோல், டீசல் விலை
ஈரானை சுற்றி போர் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு சில நாடுகள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அதில் முக்கியமான நாடு ஜெர்மனியாகும். அமெரிக்கா - ஈரான் மோதல் போக்கு காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 10% அதிகரித்துவிட்டது. போர் சூழல் உருவாகியுள்ளதால், லோக்சபா தேர்தல் முடிந்ததும், இந்தியாவில் கடுமையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்க கூடும் என தெரிகிறது.