தமிழர்களைக் கொன்று குவித்த சவேந்திர சில்வா.. உள்ளே வரக் கூடாது.. அமெரிக்கா அதிரடி தடை
வாஷிங்டன்: 2009ல் நடந்த ஈழ இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த படையணியின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் வர அந்த நாட்டு அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை மிகக் கொடூரமாக இலங்கை ராணுவம் படுகொலை செய்தது. பன்னாட்டு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த கொடூர இன அழிப்புப் போரை உலக நாடுகள் அமைதியாக வேடிக்கை பார்த்தன.
இந்த நிலையில் மிகப் பெரிய அளவில் தமிழர்களைக் கொன்று குவித்த கொடூர அணியாக இலங்கை ராணுவத்தின் 58வது படையணி திகழ்ந்தது. அதன் தளபதியாக அப்போது இருந்தவர் தான் இந்த சவேந்திரா சில்வா. இவரது உத்தரவின் பேரில்தான் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
சிஏஏ போராட்டம், தடியடி.. முதல்வரை சந்தித்து சென்னை காவல் துறை ஆணையர் விளக்கம்
இனப்படுகொலை
2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது 58-வது டிவிஷன் கமாண்டராக பணியாற்றியவர் ஜெனரல் சவேந்திரா சில்வா. இவரது தலைமையிலான படையினர்தான் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி தமிழர்களை கொத்துக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொன்றனர்.
தமிழர்களை மனிதக் கேடயமாக்கி
போரின் இறுதியில் ரமேஷ் தலைமையிலான கிழக்குப் படையினர், சில்வா தலைமையிலான சிங்களப் படையிடம் சரணடைந்தனர். ஆனால் அவர்களை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்த சிங்களப் படையினர் பின்னர் அனைவரையும் படுகொலை செய்து விட்டது. இதுதொடர்பாக, நியூயார்க் தெற்கு மன்ஹாட்டன் கோர்ட்டில் ரமேஷின் மனைவி வத்சலா தேவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நியூயார்க்கில் வழக்கு
ராஜபக்சே நியூயார்க் வந்த சமயத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதில், ராஜபக்சே, சவேந்திர சில்வா உள்ளிட்டோர் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. தனது கணவரின் மரணத்திற்குக் காரணமான இவர்களைத் தண்டிக்க வேண்டும். தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார் வத்சலா தேவி.
ஐ.நாவுக்கான பிரதிநிதி
இலங்கைப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்கள் உள்ளிட்டவற்றுக்கான பல்வேறு புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும், ஐநா. நிபுணர் குழுவின் அறிக்கையையும் இணைத்திருந்தார் வத்சலா தேவி. இந்த சில்வா ஈழப் போர் முடிந்ததும், ஐநா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இவர் மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கடந்த 2013ம் ஆண்டு மனித உரிமை மீறல் வழக்கும் கூட பதிவானது.
|
அமெரிக்காவுக்குள் நுழைய தடை
இந்த நிலையில் சில்வாவை அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவீட் ஒன்றையும் போட்டுள்ளார். அதில், இலங்கை உள்நாட்டுப் போரில் சட்டவிரோத படுகொலைகளில் தொடர்புடையவரான சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய அருகதையவற்றவர் என உத்தரவிடப்படுகிறது. போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகளை மீறும் யாரையும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது, சலுகை காட்டாது என்றும் பாம்பியோ கூறியுள்ளார்.
இலங்கைக்கு அதிர்ச்சி
அமெரிக்காவின் இந்த முடிவால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அரசு தனது நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா இலங்கை முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கிறார்.