வாயை திறந்தாலே பொய்... டிரம்ப்புக்கு எதிராக ஒன்றிணைந்த அமெரிக்க ஊடகங்கள்.. நேரலை ஒளிபரப்பு 'கட்'
வாஷிங்டன்: வரிசையாக பொய்யாக சொல்கிறார் என்று குற்றம்சாட்டி, அமெரிக்க முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள், அதிபர் டொனால்டு டிரம்ப் உரையை நேரலை ஒளிபரப்பு செய்வதை நிறுத்திவிட்ட பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் யார் அதிபர் என்று முடிவாகவில்லை.
இந்த நிலையில்தான் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் இருக்கக்கூடிய மாகாணங்களில், தேர்தல் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் டிரம்ப். மூன்று மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அவர் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
நீலம் vs சிவப்பு.. டிரம்ப்பால் பிளவுபட்டு நிற்கும் மக்கள்.. சிவில் வாரை நோக்கி செல்கிறதா அமெரிக்கா?
ஜோ பிடன் முன்னிலை
தேர்தல் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப், தான் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தார். ஆனால் உண்மையான எண்ணிக்கையை பொருத்தளவில் ஜோ பிடன் முன்னிலையில் இருக்கிறார். தேர்தலில் முறைகேடு நடப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறி வரும் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு முன்பாக குவிந்து வருவதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு வருகிறது.
திருடியதாக குற்றச்சாட்டு
இதை கருத்தில் கொண்டு முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள் அதிரடி முடிவுகளை எடுத்து உள்ளன. இப்படித்தான் இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு டொனால்ட் ட்ரம்ப் நேரலையில் தேர்தல் முடிவுகள் பற்றி குற்றம்சாட்டி பேசியபோது பல டிவி சேனல்கள் அதை நிறுத்தி விட்டன. 17 நிமிடங்கள் டொனால்ட் ட்ரம்ப் பேசியிருந்தார். அப்போது சட்டவிரோதமாக ஓட்டுப்போட்டு ஜனநாயக கட்சி வெற்றி பெற முயற்சி செய்கிறது. தேர்தலை எங்களிடமிருந்து திருடுகிறார்கள் என்றெல்லாம் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.
பேச்சை திருத்துகிறோம்
எம்எஸ்என்பிசி டிவி சேனல் தொகுப்பாளர் பிரைன் வில்லியம்ஸ் இந்த நேரலையின்போது குறுக்கிட்டு பேசினார். அவர் கூறுகையில், வழக்கத்துக்கு மாறான ஒரு நிலைமையில் நாங்கள் இருக்கிறோம். முதல் முறையாக அமெரிக்க அதிபரின் பேச்சை இடைமறித்ததோடு மட்டுமல்லாமல் அவரது பேச்சை திருத்தும் நிலைமையில் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி விட்டு நேரலையை துண்டித்து விட்டார்.
கைவிட்ட ஊடகங்கள்
சிஎன்என் தொலைக்காட்சியின் ஜேக் டாப்பர் பேசுகையில், அமெரிக்க மக்கள் தேர்தல் முடிவை திருடிவிட்டதாக அதிபர் ஒரு பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். இப்படி ஒரு சோகமான இரவை அமெரிக்கா சந்தித்துள்ளது. பொய், மீண்டும் பொய். மறுபடியும் பொய், என்பதுதான் டொனால்ட் ட்ரம்ப் பேச்சின் சாராம்சமாக இருக்கிறது. எந்த ஒரு ஆதாரத்தையும் முன் வைக்காமல் தொடர்ந்து தேர்தல் முடிவு திருடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார் என்று கூறி அந்த தொலைக்காட்சியின் நேரலையை துண்டித்து விட்டார். ஏற்கனவே குடியரசுக் கட்சியில் உள்ள பல தலைவர்களும் டிரம்ப் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஊடகங்களும் அவரை கைவிட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.