உலகின் முன்னணி சக்தியாக உருவெடுக்கும் இந்தியா.. சல்யூட் வைக்கும் அமெரிக்கா!
வாஷிங்டன்: உலகின் முன்னணி சக்தியாக இந்தியா உருவெடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனுடன் கடந்த திங்களன்று தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், அதற்கு வெளியிலும், அமைதி மற்றும் பாதுகாப்பை மேற்கொள்வதற்கான நட்புறவை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தென் சீனக் கடல் முதல் இந்திய-சீனா எல்லை வரை சீனா ஆதிக்கம் செலுத்தி வருவது தொடர்பாகவும் பிரதமர் மோடி பேசினார்.
அமெரிக்கா காவல்துறையில் மிக பெரிய மோசடி.. ஒற்றை ஆளாக 11 மில்லியன் டாலரை சுருட்டிய போலீஸ் அதிகாரி
இந்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்களின் மிக முக்கியமான கூட்டு நாடுகளில் ஒன்று இந்தியா என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவை வரவேற்கிறோம்
இதுகுறித்து நேற்று (பிப்.9) அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான நட்பு நாடுகளில் ஒன்றாகும். இந்தியா, ஒரு முன்னணி உலகளாவிய சக்தியாக உருவெடுப்பதையும், பிராந்தியத்தில் அந்நாடு வழங்கும் பாதுகாப்பையும் நாங்கள் வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.
பலதரப்பிலும் சப்போர்ட்
மேலும், "பாதுகாப்பு, இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, அமைதி காத்தல், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், விண்வெளி மற்றும் சமுத்திரம் என்று பலதரப்பிலும் நாங்கள் இந்தியாவிற்கு ஒத்துழைப்போம்" என்றும் தெரிவித்துள்ளார்.
146 பில்லியன் டாலர்
நிரந்தரமற்ற உறுப்பினராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (யு.என்.எஸ்.சி) இந்தியா நீடிப்பதை வரவேற்ற நெட் பிரைஸ், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது என்றும், மொத்த இருதரப்பு வர்த்தகம் 2019 இல் 146 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா கவலை
அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சனையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை தருகிறது. எப்போதும், எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் துணை நிற்போம். இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நேரடி பேச்சுவார்த்தைக்கும் அமைதியான தீர்வு முறைக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" என்றார்.