அமெரிக்கா வல்லரசு நாடுன்னீங்க.. இப்படி இருக்கு.. குப்பை போடும் கவரை எடுத்து.. நர்ஸ்களின் பரிதாப நிலை
வாஷிங்டன்: அமெரிக்கா ஒரு வல்லரசு நாடு என்பதை மட்டும்தான், நாம் அழுத்தமாக நம்பிக்கொண்டு இருக்கிறோம் .ஆனால் அதன் சுகாதாரத்துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஓட்டையை இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளுக்கே தெரிய வைத்துவிட்டது.
Recommended Video
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வருவது அனைவரும் அறிந்ததுதான். 700 பேருக்கும் மேலே அங்கு இந்த வைரஸ் நோயால், பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஆரம்பத்திலேயே இந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது
என்னது மலேரியா மருந்தா
இதற்கு நடுவே மலேரியாவுக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளை சாப்பிட்டால் உடல் நிலை சரியாகி விடும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து மருத்துவர்களால் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருக்க கூடிய ஒரு அரசியல்வாதி சொல்வதை மக்கள் கேட்டு சுயமாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
நியூயார்க் நிலைமை
இந்த நிலையில், நியூயார்க் மேன்ஹேட்டன் மவுண்ட் சினாய் வெஸ்ட் மருத்துவமனையில், கொரோனா வைரஸ் நோய் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போதிய உபகரணங்கள் இல்லாமல் செவிலியர்களை பணியாற்ற வைத்திருக்கிறது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கையுறை இல்லை
அந்த மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய செவிலியர்கள் தங்கள் கைகளுக்கு கையுறைக்கு பதிலாக குப்பை கொட்ட பயன்படுத்தப்படக் கூடிய பிளாஸ்டிக் கவர்களை அணிந்தபடி நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வந்தது. உடலை சுற்றிலும் இதுபோன்ற கவர்களைத்தான் அணிந்திருந்தனர்.
பரிதாபம்
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய உதவி நர்சிங் மேனேஜர் கியோஸ் கெல்லி என்பவர் வைரஸ் தாக்குதலால் பலியாகியுள்ளார். மருத்துவ பணியாளர்கள் மூலமாக வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதை அறிந்தும், இதுபோல மெத்தனமாக அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
வெட்கம்
இந்த நாட்டில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறோம் என்றெல்லாம் கூறி பலரும் கருத்துத் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. இது அமெரிக்காவின் மற்றொரு முகத்தை உலகத்திற்கு காட்டுகிறது. ஆனால் அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த நோய் தாக்கம் அதிகமானால் அதை சமாளிக்க கூடிய உபகரணங்கள் இருக்காதே, மருத்துவ பணியாளர்கள் மூலமாக மேலும் பலருக்கும் பரவி விடுமோ என்ற அச்சம் எல்லாம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.