அமெரிக்காவில்.. கிறிஸ்துமஸ் தினம் காலையில்.. கார் குண்டு வெடிப்பு.. திட்டமிட்ட சதி என போலீஸ் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் கார் குண்டு வெடித்த சம்பவத்தில், 3 பேர் காயமடைந்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட குண்டுவெடிப்பு என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் உள்ளது நாஷ்வில். அங்கு உள்ளூர் நேரப்படி கிறிஸ்துமஸ் தினமான இன்று காலை குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது.
இந்த கார் குண்டு பற்றி சில நிமிடங்கள் முன்பு போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே குடியிருப்புவாசிகளை அவசரமாக வெளியேற்றியுள்ளனர். அதேநேரம், எப்படி இந்த தகவல் கிடைத்தது என்பதை காவல்துறை வெளியிடவில்லை. துரித முன்னெச்சரிக்கை எடுத்திருந்தாலும், 3 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கைவரிசைதான் இருக்க கூடும் என்று தெரிகிறது.
9 பிளாக்குகள் தொலைவில் உணரக்கூடியதாக இந்த குண்டு வெடிப்பு இருந்தது. ஒரு அதிகாரிக்கு காலில் காயமேற்பட்டது. தற்காலிக செவித் திறன் இழப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது.
குப்பைகள் மற்றும் பல வாகனங்கள் தீப்பிடித்ததாக குடியிருப்பாளர்கள் கூறினர்.