ஜோ பைடன் பதவியேற்பு: இந்தியர்கள் பெருமை கொள்ளும் தருணம்! யார் இந்த வினய் ரெட்டி?
வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்படியொரு உயர்ந்த பதவிக்கு வினய் முன்னேறி இருப்பது எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, எங்கள் கிராமத்திற்கே கிடைத்த பெருமை.
அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் தொடக்க உரையை கேட்க உலகமே காத்திருக்கும் நிலையில், ஹைதராபாத்தில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தின் பொதிரிரெடிபெட்டா கிராமவாசிகள், தங்கள் வேரிலிருந்து தோன்றிய ஒருவரின் ஆக்கத்தில் உருவான பைடனின் உரையை கேட்க பேராவலோடு உள்ளனர்.
காரணம், புதிய அமெரிக்க அதிபரின் உரை எழுத்தாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோலெட்டி வினய் ரெட்டி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான், பைடனின் இன்றைய தொடக்க உரையையும் தயாரித்துள்ளார்.
யார் இந்த வினய் ரெட்டி?
வினய்யின் தாத்தா திருப்பதி ரெட்டி பொதிரிரெடிபெட்டா கிராமத்தின் முக்கியஸ்தராக பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.
வினய்யின் தந்தை நாராயண ரெட்டி கிராமத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்து, ஹைதராபாத்தில் எம்பிபிஎஸ் படித்தார். பின்னர் 1970-ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
வினய் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அவர் ஓஹியோ மாகாணத்தின் டேட்டனில் வளர்ந்தார். குடும்பத்தில் மூன்று மகன்களில் இரண்டாமானவர் வினய். ஓஹியோவில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மியாமி பல்கலைக்கழகம் மற்றும் ஓஹியோ மாநில பல்கலைக்கழக சட்டக் கல்லூரிக்கு உயர் கல்விக்காகச் சென்றார். தற்போது வினய் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் வசித்தாலும், அவரது குடும்பத்தினர் தங்கள் கிராமத்துடன் தொடர்பில் உள்ளனர். நாராயணா மற்றும் அவரது மனைவி விஜயா உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க கிராமத்திற்கு வருவார்களாம். அவர்களுக்கு அங்கு மூன்று ஏக்கர் நிலமும் ஒரு வீடும் உள்ளது.
இதுகுறித்து வினய் ரெட்டியின் உறவினர் சாய் கிருஷ்ண ரெட்டி ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில், " அமெரிக்காவில் இப்படியொரு உயர்ந்த பதவிக்கு வினய் முன்னேறி இருப்பது எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, எங்கள் கிராமத்திற்கே கிடைத்த பெருமை" என்று கூறியுள்ளார்.
பைடன்-ஹாரிஸ் ஆகியோருக்கு உரை எழுத்தாளராகவும், பைடன்-ஹாரிஸ் பிரச்சாரத்தின் மூத்த ஆலோசகராகவும் வினய் பணியாற்றி இருக்கிறார்.
ஜோ பைடன் 2013 - 2017 வரை 2வது முறையாக துணை அதிபராக பதவி வகித்த போது, அவருக்கு உரை எழுத்தாளராகவும் வினய் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒபாமா-பைடன் நிர்வாகத்தில், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் சுகாதார - மனித சேவைகள் துறையின் மூத்த உரை எழுத்தாளராகவும், ஒபாமா-பைடன் மறுதேர்தல் பிரச்சாரத்தின் துணை உரை எழுத்தாளராகவும் வினய் பணியாற்றி இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.