இந்த விஷயத்தில்...சீனாவுடன் உறவு வைக்கத் தயார்...டொனால்ட் ட்ரம்ப்!!
வாஷிங்டன்: கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை சீனா உள்பட முதலில் யார் கண்டுபிடித்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். ஒருபடி மேலே போய், சீன வைரஸ் என்றும் அழைத்து பீஜிங்கிற்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, ஆதாரம் இல்லாத இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கண்டிக்கிறோம் என்று தெரிவித்து இருந்தது.
சீனா மீது அமெரிக்கா மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்து இருந்தது. வுகானில் இருக்கும் பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான் வைரஸ் வெளியானது என்று இன்று வரை அமெரிக்க புலனாய்வு அமைப்பு கூறி வருகிறது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மன் உள்பட 160 நாடுகளின் அழுத்ததுக்குப் பின்னர் வுகானுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பும் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில், அமெரிக்கா , சீனா, ரஷ்யா உள்பட சில நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டால்.. ரஷ்யா, சீனாவுக்கு ஜோ பிடென் கடும் எச்சரிக்கை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு கட்டங்களைக் கடந்து மூன்றாம் கட்டத்திற்குள் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் சென்று இருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வில் மனிதர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்து இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ''கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். இந்த முயற்சியில் சீனா உள்பட எந்த நாடுகளும் வெற்றி பெற்றால் அந்த நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.
எதிர்பார்த்ததை விட விரைவில் தடுப்பு மருந்து அமெரிக்காவில் இருந்து மக்களுக்கு கிடைக்கும். இந்த மருந்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ராணுவ வீரர்கள் உதவுவார்கள் '' என்று தெரிவித்துள்ளார்.