"மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்.." முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்!
வாஷிங்டன்: நாம் நிறையவே சரி செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முதல் உரையில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவின்போது ஜோ பைடன் அதிபராக முதல் உரையை ஆற்றினார்.
இந்த உரையை உலகமே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து தரப்பையும் தொட்டுச் செல்லும் பேச்சாக அது அமைந்திருந்தது.
ஜோ பிடன் பேச்சின் சில முக்கிய அம்சங்களை இங்கே பாருங்கள்: இன்றைய தினம் ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. தனிநபருக்கான வெற்றி இது கிடையாது என்று நான் சொல்வேன்.
அமெரிக்கர்களாக ஒன்றிணைவோம்.. கன்னிப்பேச்சில் உணர்ச்சிவசப்பட்ட பிடன்.. வரலாற்று சிறப்புமிக்க உரை!
ஒற்றுமை தேவை
இதற்கு முந்தைய ஆட்சியாளர்களை நான் எனது இதயத்தின் அடியிலிருந்து நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக நானிருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்த என்னுடன் கரம் கோர்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
சீரமைக்க வேண்டும்
வேலைவாய்ப்பு பிரச்சனை, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, நோய் பிரச்சனை உள்ளிட்ட பலவற்றை இந்த நாடு எதிர்கொண்டு வருகிறது. இவை அனைத்தையும் குணப்படுத்த வேண்டும், மாற்ற வேண்டும், சீரமைக்க வேண்டும். வெற்றி பெற வேண்டும். நமக்கான சவால்களை எப்படி எல்லாம் கடக்கப் போகிறோம் என்பதை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது.
அனைத்து அமெரிக்கருக்குமான அரசு
அமெரிக்காவை, ஒவ்வொரு அமெரிக்கரையும் பாதுகாப்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன். கடவுள் இந்த தேசத்தை காப்பாற்றுவார், கடவுள் நாட்டின் தடைகளை தகர்க்க துணை நிற்பார். இவை அனைத்துக்குமான பணி இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.
சவால்களில் வெல்வோம்
அமெரிக்கா எப்போதுமே சவால்களில் இருந்து மீண்டு எழுந்து வந்த ஒரு நாடு. இப்போதும், இந்த மோசமான காலகட்டத்தில் இருந்தும், நாம் முன்னேறி வெளியேறுவோம். கடந்தகால சவால்களை மட்டும் கிடையாது. இன்றைய சவால்களையும் இனி வரக்கூடிய சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு ஜோ பைடன் தனது உரையின்போது தெரிவித்தார்.
டிரம்ப் நிர்வாக சீர்கேடுகள்
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது இன மோதல்கள் அமெரிக்காவில் தலை தூக்கின. பொருளாதாரத்தில் பாதிப்புகள், வெளிநாட்டு உறவில் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில்தான், எல்லாவற்றையும் மாற்றுவோம் என்று ஜோ பிடன் உரையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.