இதை செய்தால்.. உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைய பரிசீலிப்போம்.. அமெரிக்கா நிபந்தனை
வாஷிங்டன்: சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தினால் உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 18,59,323 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 106,925 பேர் பலியாகி உள்ளனர். 6,15,416 பேர் குணம் அடைந்துவிட்டனர். 11,36,982 பேர் நோயாளிகளாக மருத்துவமனையில் உள்ளார்கள். இதில் 16,949 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கலவர பூமியாக மாறிய அமெரிக்கா.. எச்சரிக்கும் டிரம்ப்.. சரிவில் பங்கு சந்தைகள்..!
அமெரிக்கா கோபம்
சீனாவின் அலட்சியத்தால் தான் இவ்வளவு மோசமான பாதிப்பு தங்கள் நாட்டிற்கு ஏற்பட்டதாக அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கவில்லை என்ற கோபமும் அமெரிக்காவுக்கு உள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உண்மையை மறைத்து உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில் கடுமையான நோய் பரவல் மற்றும் பொருளாதார பாதிப்பு தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலக சுகாதார அமைப்பு
இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், "உலக சுகாதார அமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும். சீனாவை சார்ந்து அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுதை உலக சுகாதார அமைப்பு நிறுத்த வேண்டும். அங்கு நிலவும் ஊழலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இந்த மாறுதல்கள் ஏற்பட்டால் மீண்டும் உலக சுகாதார அமைப்பில் இணைவது பற்றி அமெரிக்கா பரிசீலிக்கும்" என்றார்.
அமெரிக்கா உதவும்
மேலும் அவர் கூறுகையில், "உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா 2800 கோடி ரூபாய் செலவு செய்கிறது. ஆனால் சீனா 280 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது. இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு ஆப்ரிக்காவில் எய்ட்ஸ், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவில்லை. வரி செலுத்தும் அமெரிக்கர்கள் தங்கள் குணத்தால் ஆப்பிரிக்காவில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்கிறார்கள். இதை உலக சுகாதார அமைப்பின் மூலம் அவர்கள் செய்யவில்லை. அமெரிக்கா அதன் பெயரிலேயே செய்கிறது.
Recommended Video
அமெரிக்கா அறிவிப்பு
உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதி, செஞ்சிலுவை சங்கம், உலகம் முழுவதும் நிதி தேவைப்படும் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும். ஆனால் இந்த பணம் ஊழலில் ஊறிப்போய்கிடக்கும், சீனாவுக்கு ஆதரவான உலக சுகாதார அமைப்பின் மூலம் அல்லாமல் நாங்களே வழங்குவோம்" இவ்வாறு கூறினார்.