விரைவில் கொரோனாவை வெல்லப் போகிறோம்.. பைசர் ஆய்வகத்தை விசிட் செய்த... அதிபர் பைடன் நம்பிக்கை
வாஷிங்டன்: பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஆய்வகத்தை விசிட் செய்த அமெரிக்க அதிபர் பைடன், விரைவில் நாம் கொரோனாவை வெல்லப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பைடன், கொரோனா பரவலுக்கு எதிராகப் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிகாக்வின் கலாமாசூ பகுதியிலுள்ள பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்
ஆய்வகத்தை இன்று அதிபர் பைடன் பார்வையிட்டார். அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய அதிபர் பைடன், தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
கொரோனாவை வெல்வோம்
இதையடுத்து அதிபர் பைடன் தனது ட்விட்டரில், "மிச்சிகனில் உள்ள கலாமாசூவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியும் செய்யும் ஆய்வகத்தை நான் பார்வையிட்டேன். கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் செயல்முறையை நேரில் காண எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அயராமல் உழைத்து வரும் தொழிலாளர்களுக்கு நன்றி. அவர்களின் கடின உழைப்பால் நாம் கொரோனா வைரசை விரைவில் வெல்லப் போகிறோம்.
ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி
தேசம் இதுவரை கண்டதிலேயே மிகவும் கடினமான பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி. இந்தப் பணிகளின் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்தேன்" என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின், பைடன் தலைநகர் வாஷிங்டனை விட்டு வெளியே வருவது இதுவே இரண்டாவது முறையாகும்,
பைசர் தடுப்பூசி
அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சுமார் 95% பலன் அளிக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா. கனடா, ஆஸ்திரேலியா என உலகின் பல முக்கிய நாடுகளில் இந்தத் தடுப்பூசியே பயன்படுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் கூட பைசரின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.87 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் கொரோனாவால் அமெரிக்காவில் 1,245 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பும் அமெரிக்காவில் 5.11 லட்சத்தை தாண்டியுள்ளது.