அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. 'பயணக் கட்டுப்பாடுகள் எல்லாம் பலன் தராது. இதை செய்யணும்..' WHO வார்னிங்
வாஷிங்டன்: ஓமிக்ரான் அச்சத்தால் பல நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், அது பெரியளவில் பலன் தராது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 25ஆம் தேதி புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அடுத்த அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா தான் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால் புதிய உருமாறிய கொரோனா உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 4ஆவது நாள் தொடரும் ரெய்டு.. சல்லடை போட்டு தேடும் அதிகாரிகள்
ஓமிக்ரான் வைரஸ்
இதனால் பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. இருப்பினும், இது பெரியளவில் பலன் தந்ததாகத் தெரியவில்லை. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உடனான விமான போக்குவரத்தை ஆஸ்திரேலியா முற்றிலுமாக நிறுத்தியது. இருந்தாலும், கூட சமீபத்தில் அங்கும் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா, அமெரிக்கா உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது.
தடுக்க முடியாது
இந்தச் சூழலில் தான் பல்வேறு நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் இயக்குநர் தகேஷி கசாய் கூறுகையில், "இது போன்ற பயணக் கட்டுப்பாடுகளால் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதைத் தாமதப்படுத்த முடியும். ஆனால், முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியாது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
நம்பியிருக்கக் கூடாது
எல்லைகளை மூடுவதை மட்டும் உலக நாடுகள் நம்பி இருக்கக் கூடாது. அதிகம் பரவும் ஆபத்துள்ள இந்த உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்பது மட்டுமே முக்கிய வழி, இருப்பினும், இந்த ஓமிக்ரான் கொரோனா எந்தளவுக்கு வேகமாகப் பரவும் என்பதற்கு நமக்கு எவ்வித தரவும் இல்லை. வேக்சின் பணிகளைத் தீவிரமாக்குவது தான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அதேபோல பொது இடங்களில் மாஸ்க அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றையும் நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள்
ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டு சில காலம் மட்டுமே ஆவதால், இது எந்தளவுக்குத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து எவ்வித தரவுகளும் இல்லை. இருந்தாலும் கூட, உலக சுகாதார அமைப்பு இதனைக் கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ளது. அதேநேரம் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட பிறகு, தங்கள் நாட்டில் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வேக்சின் பாகுபாடு
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வேக்சினை நாம் விரைவாகப் போடவில்லை என்றால் புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்படும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. வேக்சின் போடுவதில் ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்கும் இடையே மிகப் பெரியளவில் வேறுபாடுகள் உள்ளது முக்கிய பிரச்சினையாக உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகள் விரைவாக வேக்சின் பணிகள் முடிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு
இருப்பினும், ஏழை நாடுகளால் வேக்சின் பணிகளை அந்தளவு வேகமாகச் செய்ய முடியவில்லை. உலகின் 4ஆவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் 35% பேருக்கு மட்டுமே 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. புதிய உருமாறிய கொரோனா தோன்றும் அச்சம் இருப்பதாலேயே உலக நாடுகளுக்கு இடையே வேக்சின் பாகுபாடுகள் இருக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இப்போது உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது தான் நடந்துள்ளது.